அரசியல்

ஓபிஎஸ் ஸ்டேட்டஸ்... போடி தொகுதி ‘பதம்’ பார்க்குமா, பதவி தருமா?

என்.கணேஷ்ராஜ்

போடி: தேனி மாவட்டம் போடி தொகுதி இம்முறை மாநில அளவில் கூடுதல் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இத்தொகுதியில் முன்னாள் முதல்வரும், இந்நாள் திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தொண்டனாக இருந்து முதல்வர் பதவி வரை உச்சம் தொட்டவர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நேர் எதிர்க்கட்சியான திமுகவில் சேர்ந்து, தற்போது அக்கட்சி வேட்பாளராக போடியில் களம் இறங்கி உள்ளார்.

தன்னை வளர்த்து விட்ட கட்சிக்கு எதிராகவே களம் இறங்கி உள்ள ஓபிஎஸ் மீது அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாமல், வழக்கம்போல சிரித்த முகத்துடன் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

போடி நகர், ஒன்றியம், 15 கிராம ஊராட்சிகள், தேனி ஒன்றியத்தில் 9 கிராம ஊராட்சிகள், சின்னமனூர் ஒன்றியத்தில் 4 கிராம ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள் உள்ளன.

இருப்பினும் பல ஆண்டுகளாக இங்கு களப்பணியாற்றி ‘தங்களில் ஒருவர்’ வேட்பாளராக வர இருந்த நிலையில், திடீர் திருப்பமாக ஓபிஎஸ், திமுகவில் இணைந்து தங்கள் வாய்ப்பை தட்டிப் பறித்ததை அக்கட்சியில் சிலர் விரும்பவில்லை.

தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசின் திட்டங்கள், தேர்தல் அறிக்கை இவருக்கு பலமாக இருக்கிறது.

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அதிமுக சார்பில் களத்தில் உள்ளவர் வி.டி. நாராயணசாமி. இவர் கடந்த தேனி மக்களவைத் தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்து போட்டியிட்டவர்.

அதிமுக தலைமை ஓபிஎஸ் மீது கடும் எதிர்ப்பு நிலையில் உள்ளதால், எப்படியும் தனது வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி, ஓபிஎஸ் மீதான அதிருப்தி உள்ளிட்டவற்றை வாக்குகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் வாக்காளர்களின் மனநிலை, வேட்பாளர்களின் செயல்பாடுகள், நாம் தமிழர், தவெக மூலம் பிரியும் வாக்குகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில்தான் இத்தொகுதியின் முடிவு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT