பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிந்த போதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், பிஹார் மாநில அமைச்சராக இருந்த 45 வயது நிதின் நபின், கட்சியின் செயல் தலைவராக டிசம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 12-வது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு ஜனவரி 19-ல் பெறப்பட்டது. இப்போதைய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிதின் நபின் சார்பில் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி டாக்டர் கே.லட்சுமணிடம் வழங்கினர்.
பின்னர், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் நிதின் நபின் சார்பில் மேலும் ஒரு தொகுப்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதுபோல, பிஹார், ஆந்திரா, மகாராஷ்டிரா, அசாம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட இதர மாநில பாஜக தலைவர்களும் நிதின் நபின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, பாஜக அமைப்புத் தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார் என்று கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி லட்சுமண் பாஜகவைப் போலவே நிதினுக்கும் 45 வயது. கட்சியின் தேசியத் தலைவர் பதவியை இளம் வயதில் எட்டிப் பிடித்த முதல் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
பிஹாரை சேர்ந்த நிதின் நபின், தனது 26-வது வயதிலேயே சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் 5-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மாநில சாலை கட்டுமானத் துறை அமைச்சராக கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி முதல் டிசம்பர் 16 வரை பொறுப்பு வகித்தார்.
இதுதவிர, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களின் பாஜக பொறுப்பாளராக பணியாற்றி உள்ளார். பாஜகவின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாமில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.