தேமுதிக விதித்த, 25 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் நிபந்தனைக்கு திமுக தயாராக இல்லை என்கிறார்கள். இதனால் தற்போது தேமுதிக மீண்டும் அதிமுக-வை நெருங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். 5 முதல் 10 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வேறு சில ‘சகாயங்களை’ செய்து தருவதாகவும் தேமுதிக-வுடன் அதிமுக பேசிவருவதாகச் சொல்கிறார்கள்.
அதேபோல, அன்புமணி தரப்பிலான பாமக-வும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வர தலையசைத்து விட்டதாகத் தெரிகிறது. அன்புமணியை பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா சந்தித்துப் பேசி இதை உறுதி செய்திருக்கிறார். 10 முதல் 15 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் பாமக-வுக்கு தரப்படலாம் எனப் பேசப்படுவதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் உள்ள நிலையில் தற்போது தேமுதிக, பாமக-வும் உள்ளே வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பட்டியலினத் தலைவர்களையும் தங்கள் கூட்டணிக்குள் அடக்கிவிட ஆட்களைப் போட்டு வேலை செய்து வருகிறது பாஜக. பட்டியலின தலைவர்களை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் 44 தனி தொகுதிகளில் பெரும்பகுதியை வென்றெடுக்க நினைக்கிறதாம் பாஜக. தங்கள் கூட்டணிக்கு ஏற்கெனவே உள்ள 39 சதவீத வாக்குகளுடன், மேலும் 10 சதவீத வாக்குகளை கொண்டு வந்து சேர்க்க எந்தெந்த கட்சிகளை எல்லாம் இணைக்க முடியுமோ அவர்களை எல்லாம் உள்ளே கொண்டு வரும் வேலையை பாஜக துணையுடன் பக்குவமாக செய்து வருகிறார் பழனிசாமி.