அரசியல்

வாக்குறுதி எண் 309... திணறுகிறதா திமுக?

செய்திப்பிரிவு

திமுக அளித்த வாக்குறுதிகளை, அதன் எண் வரிசையில் சுட்டிக்காட்டி, ‘இந்த வாக்குறுதி என்னவானது? அது என்னவானது?’ என்று கேள்விக்கணைகளால் அரசை துளைத்துக் கொண்டிருக்கின்றன தமிழக எதிர்க்கட்சிகள். அந்த வரிசையில் இப்போது திமுகவை நோக்கி வீரியமாகப் பாயும் கேள்விக்கணைதான் ‘வாக்குறுதி எண் 309 என்னவானது?’ என்பதே!

கடந்த 2003-ம் ஆண்டு, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசால், பழைய ஒய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. 2004 ஏப்ரல் 1 முதல் புதிய ஒய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை அப்போதைய அதிமுக அரசு தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தியது. ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆயுதப்படைகளைத் தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கட்டாயம் பொருந்தும். மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை பின்பற்றுகின்றன.

தமிழகம் போல் பல மாநிலங்களும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்ப்பட்டாலும் கூட அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் தரப்பில் பரவலாக எழுந்த எதிர்ப்பால், இந்தத் திட்டத்தில் இருந்து சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டன. ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சில மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது முன்வைக்கப்பட்டு, ஆட்சி அமைந்த பின்னர் அது நிறைவேற்றப்பட்டதும் என்பது கவனிக்கத்தக்கது. அந்த வரிசையில், திமுக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 309-வது வாக்குறுதியாக முன்வைக்கப்பட்டதுதான் ‘ஆட்சிக்கு வந்தபின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும்’ என்பது. ஆனால், இதோ 2026 பிறக்கவிருக்கிறது, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தலே வந்துவிடும். ஆனால், இன்னும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகவில்லை என்று போராட்டக் களங்கள் தகிக்கின்றன.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோல் ஜாக்டோ - ஜியோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன.

தேர்தல் வரும் வேளையிலாவது காரியம் சாதித்துவிடமாட்டோமா என்று போராட்டங்கள் வலுத்து வருகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், பழைய ஓய்வூ​தியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய்​வதற்கு குழு அமைத்தது, அறிக்கை தர அந்தக் குழுவுக்கு 9 மாதங்கள் அவகாசம் கொடுத்​தது அரசு ஊழியர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

அண்மையில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பேசிய பிரதிநிதிகளும் கூட, “கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு போராட்டத்தின்போதும் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைத்து காலதாமதம் செய்வதை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. நிதி பிரச்சினை என ஏற்கெனவே கூறியதையே மீண்டும் சொல்கின்றனர்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

“போராடுவோரின் உண்மையான பிரச்சினையை புரிந்துகொண்டு தீர்வு காணாமல் திசை திருப்பும் முடிவுகளை அரசு எடுக்குமேயானால் அது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும். அதுவும் தமிழக அரசியல் களத்தில் முன் எப்போதும் இல்லாதது மாதிரியான கூட்டணிக் கணக்குகளும், புதுமுக வருகைகளும், பாஜகவின் விசிபிலிட்டியும், பிரசன்ஸும் அதிகமாகக் காணப்படும் நிலையில் திமுக அரசு ரிஸ்க் எடுக்கிறது என்றே சொல்ல வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதே தேர்தலில் பேக் ஃபயர் ஆகாமல் காத்துக் கொள்ள ஒரே வழி” என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

இது ஒருபுறம் இருக்க, “இப்போதைய நிதி நிலவரத்தைக் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதால் திமுக அரசு வேறு வழிகளையும் தேடலாம்” என்ற பேச்சும் இருக்கிறது.

SCROLL FOR NEXT