கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில், எல்டிஎஃப் எனப்படும் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் எனப்படும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த மும்முனைப் போட்டி குறித்த கள நிலவரம் குறித்தும், இதில் முந்தும் சாத்தியமுள்ள அணி குறித்தும் சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
ஆளும் எல்டிஎஃப் அணி, ஹாட்ரிக் வெற்றியுடன் மூன்றாவது முறையாக கேரள சட்டப்பேரவையைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. அதன்நிமித்தமாக, கடந்த 10 ஆண்டுகளில் மாநில வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக செய்தவற்றை பட்டியிலிட்டு கூடவே, “எல்டிஎஃப் இல்லாவிட்டால் வேறு யார்?” என்று அர்த்தம் தரும் “மற்றாருண்டு எல்டிஎஃப் அல்லாதே’ என்ற தலைப்பில் பிரச்சார முழக்கத்தை முன்னெடுத்துள்ளது.
கேரளாவில் அண்மையில் அமலுக்கு வந்த வேலையில்லா மகளிர், திருநங்கைகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் ‘ஸ்ரீ சுரக்ஷா’ திட்டத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்கிறது. இது ஹாட்ரிக் வெற்றிக்கு ஒரு உந்துவிசையாக அமையும் என்று கணிக்கிறது. ஆனால், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம், மாநிலத்தின் பணவீக்கப் பிரச்சினை, கிறிஸ்தவர்கள் மற்றும் சாதிவாரியான அதிருப்திகளால் ஆளும் கட்சிக்கு எதிரான அலை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களிலும் தனது பிடியை இழந்துள்ள இடதுசாரிகளுக்கு கேரளாவை தக்கவைத்துக் கொள்வது கேரளாவை தாண்டி தேசிய அளவிலும் மிக முக்கியம்.
அடுத்ததாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கள நிலவரத்தை அலசுவோம். “கேரளா வெல்லும், யுடிஎஃப் வழிநடத்தும்” என்பதுதான் அந்தக் கூட்டணி முன்னெடுத்துள்ள பிரச்சார முழக்கம். கேரளாவில் வலுவான ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை இருப்பதாக நம்பும் இந்தக் கூட்டணி, அதை அறுவடை செய்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சட்டப்பேரவை பிரவேசம் செய்யும் முனைப்பில் உள்ளது.
கேரள இடைத்தேர்தல் வெற்றிகள், உள்ளாட்சி அமைப்புகளின் வெற்றி ஆகியனவற்றை சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கான அஸ்திவாரம் என்கிறது யுடிஎஃப். கேரள தேர்தலின் மும்முனைப் போட்டியில் மூன்றாவதாக இருப்பது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. ‘வளர்ந்த கேரளம்’ என்பது இதன் பிரச்சார முழக்கத் தலைப்பு. இந்தத் தேர்தலுக்காக பாஜக முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. காசர்கோடின் மஞ்சேஸ்வரம், பாலக்காடு, திருவனந்தபுரத்தின் நேமம் தொகுதிகளை பாஜக குறிவைப்பதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் ஆளும் எல்டிஎஃப், பிரதான எதிர்க்கட்சி யுடிஎஃப் என இரண்டு கூட்டணிகள் மீதும் பாஜக முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு இரண்டுமே மதவாதத்தை ஊக்குவிக்கின்றன என்பதே. இது ஒருபுறம் இருக்க, கேரளாவைப் பொறுத்தவரை பாஜகவின் வாய்ப்பு இப்போதும்கூட சொற்பமே என்று அம்மாநில மூத்த அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். அந்த வகையில் கேரள சட்டப்பேரவை களத்தில் 140 தொகுதிகளில் 15 தொகுதிகளில்தான் மும்முனைப் போட்டி எனக் கூறலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, சிஎன்என் - நியூஸ்18 நடத்திய வோட்வைப் என்ற கருத்துக்கணிப்பில், எல்டிஎஃப், யுடிஎஃப் ஆகிய இரு கூட்டணிகளும் சுமார் 36 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 14.9% வாக்குகளைப் பெறும் என்றும் தெரியவந்துள்ளது. அதேபோல், எல்டிஎஃப் கூட்டணி 68 முதல் 73 தொகுதிகளிலும், யுடிஎஃப் கூட்டணி 64 முதல் 70 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிகிறது. அதேநேரத்தில் என்டிஏ கூட்டணி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் எல்டிஎஃப் கூட்டணி 99 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 41 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்தச் சூழலில், கேரளாவில் ஆளும் எல்டிஎஃப் கூட்டணி ஹாட்ரிக் அடிக்கப் போகிறதா? யுடிஎஃப் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் ரீ-என்ட்ரி தரப்போகிறதா?, பாஜக கணிசமான எம்எல்ஏ.க்களை பெறுமா என்பதெல்லாம் மே 4-ல் தெரியவரும்.