அரசியல்

திமுக வாக்குறுதி எண் 311... இடைநிலை ஆசிரியர்கள் போராடுவது ஏன்?

செய்திப்பிரிவு

‘சம வேலைக்கு சம ஊதி​யம்’ கோரிக்​கையை முன்​வைத்து எஸ்​எஸ்​டிஏ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மீது ‘அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்’ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனாலும், “எங்களை எதுவும் தடுக்காது; இப்போது இல்லையென்றால் எங்களுக்கு விடிவு காலம் எப்போது?” என்று முந்தைய காலக்கட்டங்களைவிட உறுதியுடன் போராடி வருகின்றனர் ஆசிரியர்கள்.

“15 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கோருகிறோம். நியாயம் கேட்டுப் போராடினால் வழக்குப் பதிவு செய்கிறீர்களே. முந்தைய ஆட்சியில் எங்களை காவல் துறை மோசமாக நடத்தியபோது கண்டித்தீர்கள். நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்கள் கண்ணீரைத் துடைப்பேன் என்றீர்களே. அந்த கண்ணீர் துடைக்கும் கரங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு, போராட்டக் களத்தில் இருந்து குரல்கள் எழுகின்றன.

கடந்த 2009 மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அடுத்த நாளான 2009 ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. அதாவது, 31.5.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 8,370 ரூபாய் அடிப்படை ஊதியமும், 2,800 ரூபாய் தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 1.6.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாய் மட்டுமே அடிப்படை ஊதியமும், 2,800 ரூபாய் தர ஊதியமும் வழங்கப்படுகிறது.

அப்போது அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் 16,000 ரூபாய்க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்கள் இடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது என்பதே போராட்டத்தின் ஆணிவேர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலம் முடிந்து, திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். ‘சொன்னது என்னவானது?’ என்ற கேள்வியையும் கேட்கின்றனர். ஏனென்றால், இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்தியபோது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதி 311-ல் தெரிவிக்கப்பட்டிருந்தது. வாக்குறுதி ஒருபுறம் கிடப்பில் கிடக்க, கடந்த 2022 டிசம்பரில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 2023 ஜனவரியில் 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் கூட இன்று வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை; ஊதிய முரண்பாடும் களையப்படவில்லை.

இந்நிலையில்தான் முந்தைய தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதியை இந்தத் தேர்தலுக்காவது நிறைவேற்றுங்கள் என்று கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். “திமுக ஆட்சி வந்ததும், எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்றுதான் நாங்கள் நம்பினோம். ஆனால் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று களத்திலிருந்து குமுறல்கள் ஒலிக்கின்றன.

தற்போது போராட்டம் வலுத்துள்ள நிலையில், பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் கு.குமரேசன் நம்மிடம் கூறும்போது, “கடந்த முறை நாங்கள் 19 நாட்கள் போராடியபோது ஒரு குழு அமைத்தார்கள். அந்தக் குழுவால் இதுவரை எந்தப் பயனும் இல்லை. நாங்கள் தொடர்ச்சியாக எங்கள் உரிமைகளுக்காக அமைதி வழியில்தான் போராடுகிறோம். ஆனால் இந்த முறை காவல் துறை எங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் இதற்கு முன்னர் இருந்திராத அளவுக்குக் கடுமையாக உள்ளது.

பெண்கள் என்று கூட பாராமல் தலைமுடியை பிடித்து இழுத்துச் செல்கின்றனர். குடும்பத்துடன் போராடும் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் குழந்தைகள் முன்னால் அவர்களைக் கடுமையாக நடத்துகின்றனர். முந்தைய ஆட்சிகளில் காவல் துறை அடக்குமுறையை கண்டித்தவர்கள் தான் இப்போது அதைவிட கூடுதலாக அடக்குமுறையை ஏவுகின்றனர்” என்றார்.

“தற்போது எஸ்எஸ்டிஏ அமைப்பு வெறும் 19,000 இடைநிலை ஆசிரியர்களுக்காகப் போராடுகிறது. அதுவும், விடுமுறை காலத்தில் மட்டும் போராடுகிறது. சென்னையில் மட்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதை விட மாநிலம் முழுவதும் ஒற்றுமையாகப் போராட வேண்டும். தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்றார் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மூத்த சங்கம் ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர்.

SCROLL FOR NEXT