அரசியல்

தேமுதிக ‘மாஸ்’ நகர்வு... பிரேமலதா எதிர்பார்ப்பது என்ன?

செய்திப்பிரிவு

ஜனவரி 9 அன்று கடலூர் மாவட்​டம் வேப்​பூர் அரு​கில் உள்ள பாசார் கிரா​மத்​தில் தேமுதிக மாநாடு நடந்​தது. பெருங்​கூட்​டம் கூடியது. மாநாட்​டில், “7 மணிக்கே கூட்டணி குறித்து அறிவிக்​கப்​படும்” என்று கட்​சி​யின் பொருளாளர் சுதீஷ் உறு​தி​யாக தெரி​வித்த போதி​லும், 8 மணி வரை மாநாட்டு மேடை குழப்​ப​மாக காணப்​பட்​டது. 8 மணிக்கு வேனில் மாநாட்​டுத் திடலை வலம் வந்த பிரேமலதா, வந்​திருந்த பெரும் கூட்​டத்​தினரைப் பார்த்து முகமலர்ச்​சி​யோடு இருப்​பதை காண முடிந்​தது.

அந்த பூரிப்​போடு கூட்​ட​ணிக் குறித்து கூட்​டத்​தில் பேசும்போது, “தை பிறந்​தால் வழி பிறக்​கும் என்று பேசி, சத்​ரிய​னாக இருந்​தது போதும்; சாணக்​கி​யத்​தன​மாக இருக்க வேண்​டும் என்​ப​தால், கூட்​ட​ணிக் குறித்து ஆண்ட, ஆளும் கட்​சிகளே முடி​வெடுக்​காத நிலை​யில் நாம் மட்​டும் ஏன் அவசரப்பட வேண்​டும்? எனவே தெளி​வாக சிந்​தித்​து, நம்மை மதிப்​பவர்​கள் யார் என்​பதை அறி​விப்​போம்” என்றதும் கூட்​டத்​தில் பெரும் ஆரவாரம் இல்​லாமல் அமைதி​யாக இருந்​தது.

அதேநேரத்தில் தேமுதிக மாவட்​டச் செய​லா​ளர்​களிடம் பேசிய போது, சில கருத்துகளைப் பகிர்ந்தன. “கடலூர் மாநாட்டில் கூடிய கூட்​டம் சுமார் ஒரு லட்​சத்தை தாண்டியிருக்​கிறது. இந்​தச் சூழலில் கூட்​டணி அறி​விப்பை மேலும் தாமதப்​படுத்​தி​னால் நமக்கு ஆதா​யம் என அண்ணி​யார் நினைக்​கி​றாங்க” என்றனர். மேலும், “90 சதவீதம் திமுக​தான் என்ற சாய்ஸ் இருந்​தது. இந்​தக் கூட்டம் மனதை மாற்​றி​யிருக்​கலாம். கூட்​டம் ஒரு லட்சத்தை தாண்​டும் என நாங்​கள் கூட கணிக்​க​வில்​லை” என்ற உண்மை நில​வரத்​தை​யும் வெளிப்​படை​யாக கூறினர்.

“நாங்​கள் யாரிட​மும் பேரம் பேச​வில்​லை” என்ற தேமு​திக தலை​வர்​கள் முதல் நிர்​வாகி​கள் வரை மறுத்​துப் பேசினாலும், மாநாட்​டில் நிறை​வேற்​றப்​பட்​டிருக்​கும் தீர்​மானங்​கள் இரு பெரும் கட்​சிகளுக்கு வலிக்​காத வகையில், இரு​புற​மும் ‘சேஃப் கார்​னரில்’ நிறைவேற்றப்பட்டிருப்​பதே இதற்கு சாட்​சி. தங்​களுக்கு ‘ஆட்​சி​யில் பங்​கு’ வேண்​டும் என்​பதை இந்த மாநாட்​டில் வலி​யுறுத்​தி​யுள்​ளனர் பிரேமல​தா​வும், எல்​.கே.சுதீஷும்.

எல்​.கே.சுதீஷ் பேசும்​போது, “கேப்​டன் முதன்​முறை​யாக போட்​டி​யிட்டு வென்ற விருத்​தாசலத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்று சட்டப்பேர​வைக்கு பிரேமலதா துணை முதல்​வ​ராக செல்​வார்” என்று பேசி​யிருக்​கி​றார். இறுதியாக பேசிய பிரேமல​தா​வும், “தே​மு​திவுக்கு அரசி​யல் அங்​கீ​காரம் வழங்​கிய மாவட்​டம் கடலூர். கேப்​டனை வெற்றி பெறச் செய்து சட்​டப்​பேர​வைக்கு அனுப்​பியது விருத்​தாசலம்​தான்” என்று கூறி, “இங்கு மேடை​யில் உள்ள மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஒவ்​வொரு​வ​ரும் அமைச்​சருக்கு நிக​ரான​வர்​கள்” என்று அழுத்​த​மாய் தெரி​வித்​திருக்​கி​றார். இதைக் கேட்டு கூட்​டத்​தில் உணர்வு ததும்​பலுடன் கரவொலி எழும்​பியது.

மொத்​தத்​தில் எந்​தக் கூட்​டணி அமைந்​தா​லும், ‘விருத்தாசலம் தொகுதி வேண்​டும் ஆட்​சி​யில் பங்கு வேண்டும்’ என்​பதை பிரேமல​தா, எல்​.கே.சு​திஷ் இரு​வ​ரும் முன்வைக்​கின்​ற​னர். “நாங்​கள் யாருட​னும் பேரம் பேசவில்லை” என மறுத்​துப் பேசி​னாலும், இந்த மாநாடு அக்கா - தம்​பி​யின் தேர்​தல் பேரத்​துக்​கான நல்லதொரு சமிக்ஞையாக மாறி​யிருக்​கிறது என்று அரசி​யல் நோக்கர்கள் கருதுகின்​ற​னர்​. - ந.முருகவேல்

SCROLL FOR NEXT