எந்த விலை கொடுத்தாவது மரணத்தைத் தள்ளிப்போட வேண்டும் என்கிற மருத்துவமனைகளின் பிடிவாதத்தால், மனித வாழ்க்கையின் இறுதிப் பக்கத்தை ஒரு புனிதமான விடைபெறுதலாகப் பார்க்காமல், இயந்திரத்தனமான ஒரு கொடூரமான நரகமாக நாம் மாற்றிவிட்டோம். இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 21 வழங்கும் Right to Life, அதாவது ‘வாழும் உரிமை’ என்பதில், Right to die with dignity-யும், அதாவது ‘கண்ணியத்துடன் இறக்கும் உரிமையும்’ அடங்கும் என 2018-இல் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
இந்த வேதனையான மருத்துவச் சுழற்சியை உடைக்க வேண்டுமானால், நமது உடலின் மீதும், நமது இறுதிப் பயணத்தின் மீதும் நமக்கு இருக்கும் உரிமையை நாம் மீளப்பெற வேண்டும். அதற்கு நமக்குக் கிடைத்துள்ள மிகச் சிறந்த சட்டபூர்வமான ஆயுதம்தான்... Living Will எனப்படும் ‘வாழும் விருப்பாவணம்’ அல்லது Advance Medical Directive எனப்படும் முன்கூட்டிய மருத்துவ உத்தரவு ஆகும்.
Living Will எனப்படும் விருப்பாவணம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் ‘நிம்மதியான மரணம் நம் உரிமை!’ என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ‘இந்து தமிழ் திசை’யில் எழுதிய கட்டுரை பரவலாக கவனம் ஈர்த்துள்ளது. அதை முழுமையாக விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.