மக்களவையில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தார். இது தொடர்ந்து 9வது முறையாக அவர் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. நிலைக்கழிவும் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, ஓராண்டு வருமானம் 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை வரை இருந்தால், வருமான வரி செலுத்த தேவையில்லை. நியூ ரீஜிம் எனப்படும் இந்த புதிய வருமான வரி விகிதம் அப்படியே தொடர்கிறது.
ஓல்டு ரீஜிம் எனப்படும் பழைய வருமான வரி விகிதத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வரி கிடையாது. சில வரிச் சலுகைகள் மூலம் பழைய வரி விகிதத்தில் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. அந்த பழைய வருமான வரி விகிதமும் அப்படியே தொடர்கிறது. வருமான வரிச் சட்டம் 1961-க்கு பதிலாக வருமான வரிச் சட்டம் 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்படும். இதற்கு சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். ஐடிஆர்-1, ஐடிஆர்-2 தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி. அதில் மாற்றம் இல்லை. தணிக்கை செய்ய தேவையில்லாத வணிகம் மற்றும் அறக்கட்டளைகள் ஆகஸ்ட் 31 வரை தாக்கல் செய்யலாம். புதிய சட்டத்தின்படி, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. ஆனால், வருமானம் தொடர்பாக தவறான தகவல் அளித்தால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.