1952-ல் வெளியாகி தமிழ் சினிமாவின் திசையை மாற்றிய ‘பராசக்தி’ படத்துக்கு, அதே பெயருடன் வெளியாகியிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’நியாயம் சேர்த்திருக்கிறதா என்று பார்ப்போம்.
வரலாற்றுச் சம்பவங்களுக்கு நடுவே கற்பனை கதாபாத்திரங்களை மையப்படுத்தி, அதை முடிந்த அளவு நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இதை முழுக்க முழுக்க ஒரு பிரச்சார படமாக ஆகிவிடாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் பாராட்டத்தக்கது. சற்றே பிசகினாலும் ஒருசார்பு நிலை எடுத்துவிடக்கூடிய அபாயம் இருக்கும் கதைக்களத்தை மிக கவனமாக கையாண்டிருக்கிறார். மற்றொன்று இதன் டெக்னிக்கல் அம்சங்கள், இசை, ஒளிப்பதிவு, கலை அலங்காரம் என படக்குழு மொத்தமும் அதன் உழைப்பை கொட்டி இருக்கிறது.
‘அமரனுக்கு’ பிறகு சிவகார்த்திகேயனுக்கு மிக முக்கியமான படம். நடிகராக அவருக்கு பேர் சொல்லும் படம். முதல் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரவிமோகன். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் மிரட்டல். ஸ்ரீலீலாவுக்கு முதல் தமிழ் படம் இது. நடிகை வைஜயந்தி மாலாவின் தோற்றத்தை நினைவூட்டுகும் மேக்கப்பில் ஆங்காங்கே ஓவர் ஆக்டிங் தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார். சில முக்கிய நடிகர்களின் கேமியோ படத்தில் உள்ளன. அவர்கள் வரும் காட்சிகள் சிறப்பு.
படத்தின் பலவீனம் என்று பார்த்தால், சிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலா இடையிலான காதல் காட்சிகள் தான். முதல் பாதியில் ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மேல் ஓடும் இந்தக் காட்சிகள் படத்துக்கு தேவையே இல்லாதது. இதில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வேறு நம் பொறுமையை சோதிக்கின்றன. ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்ற பெயரில் இதுபோன்ற படங்களில் வைக்கப்படும் காதல் காட்சிகள் பெரும்பாலும் வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருப்பதன் மர்மம் தெரியவில்லை.
இடைவேளைக்கு முன்னதாக வரும் 20 நிமிடங்கள் காட்சிகள் தீயாக இருக்கின்றன. அந்த ஒட்டுமொத்த காட்சியும் எழுதப்பட்ட விதம் அட்டகாசம். கைதட்டல் காதை பிளக்கிறது. இத்தனை வெட்டுகளுக்கு மத்தியில் இந்தக் காட்சி சென்சாரில் தப்பித்ததே ஆச்சர்யம். இப்படி விறுவிறுப்பாக எழுதப்பட்ட காட்சியால் ஏற்பட்ட உணர்வெழுச்சியில் ஒரு வாளி தண்ணீரை ஊற்றும்படியாக இடைவேளை முடிந்தபிறகே ஒரு காதல் பாட்டை வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஸ்பீடு பிரேக்கர்களையும் சேர்த்து சென்சார் கத்தரி போட்டிருந்தால் படத்தின் நீளமாவது குறைந்திருக்கும்.
1965-ல் நடந்த பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பதிவு செய்த விதம் சிறப்பு. படத்தில் சில மறைந்த தமிழக அரசியல் தலைவர்களின் கேமியோ வரும் இடம் கூஸ்பம்ப்ஸ் ரகம். ஏகப்பட்ட கட் + மியூட் செய்திருந்தாலும் படத்தின் நோக்கத்தில் அவை எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை. ஒரு சில இடங்களில் நாடகத்தனம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்து இருக்கலாம். உதாரணமாக, பொள்ளாச்சியில் காளி வெங்கட் வரும் காட்சிகள் படு செயற்கைத்தனம். அதிலும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காட்சியில் அவர் பேசும் வசனத்தில் எந்த இயல்புத் தன்மையும் இல்லை.
ஒரு வரலாற்று சம்பவத்தை படமாக்கும்போது, அதை கற்பனை கலந்து திரைக்கதையாக மாற்றுவது சரி. ஆனால் முழுக்க முழுக்க ஒரு ஹீரோ - வில்லன் சண்டையாக மட்டுமே மாறியிருப்பது நெருடல். இந்தி திணிப்பு போராட்டங்கள் குறித்து எதுவும் அறியாத தலைமுறை மத்தியில் அதுகுறித்த அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதையும் உணர முடிகிறது. முதல் பாதியில் தேவையற்ற காதல் காட்சிகளையும், பாடல்களையும் குறைத்து விட்டு கதைக்கருவுக்கு தொடர்புடைய காட்சிகளை கூடுதலாக சேர்த்து திரைக்கதையின் வீரியத்தை கூட்டியிருந்தால் இன்னும் கொழுந்து விட்டு எரிந்திருக்கும் இந்த ‘பராசக்தி’.