உலகம்

பிறப்பு குடியுரிமை தொடர்பான ட்ரம்பின் உத்தரவு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெக்ஸ்டர்

வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே அந்நாட்டின் குடியுரிமை கிடைக்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ சட்டத்தைக் கட்டுப்படுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அவசர நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்துள்ளது. 

அமெரிக்க அரசியலமைப்பின் 14-ஆவது திருத்தத்தின்படி, அங்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற 150 ஆண்டுகால நீண்டகால மரபை உறுதி செய்து நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளான 2025 ஜனவரியில் இந்த அவசர உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் அல்லது தற்காலிக விசாக்களில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் தானாகக் குடியுரிமை வழங்கக் கூடாது என அந்த உத்தரவு கட்டுப்பாடு விதித்தது.

பெற்றோரில் ஒருவராவது அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றவராகவோ இருந்தால் மட்டுமே குழந்தைக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு, 6-3 என்ற நீதிபதிகள் வாக்கு வித்தியாசத்தில் ட்ரம்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது.

தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில், “அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தத் தேசத்தில் பிறக்கும் ஒவ்வொரு சுதந்திர மனிதனுக்கும் வழங்கிய வாக்குறுதியை இன்று நாம் நிலைநாட்டியுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பில் லிபரல் நீதிபதிகளுடன் இணைந்து ட்ரம்பால் நியமிக்கப்பட்ட கன்சர்வேட்டிவ் நீதிபதியும் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த உத்தரவு அமலுக்கு வந்திருந்தால், அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிறக்கும் சுமார் 2,50,000 குழந்தைகள் குடியுரிமையற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த வழக்கின் வாதத்தைக் கேட்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக நீதிமன்றத்துக்கு சென்றிருந்தார். அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு அதிபர் உச்ச நீதிமன்ற வாதத்தைக் கேட்க நேரில் சென்றது அதுவே முதல்முறையாகும். கடந்த பிப்ரவரி மாதம் ட்ரம்பின் உலகளாவிய வர்த்தக வரிக் கொள்கையை  ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தற்போது அவரது மிக முக்கியமான குடியேற்றக் கொள்கையையும் முடக்கியுள்ளது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது

SCROLL FOR NEXT