உலகம்

ஈரானில் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமையகம் அழிப்பு: அமெரிக்க ராணுவம் தகவல்

‘பாம்பின் தலை வெட்டப்பட்டது’ என ட்வீட்!

வேட்டையன்

வாஷிங்டன்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ‘பாம்பின் தலை வெட்டப்பட்டது’ என அமெரிக்கா இதை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, அவரது குடும்பத்தினர், ஈரானின் முக்கிய தலைவர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் நேச நாடுகளாக உள்ள பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.

          

“கடந்த 47 ஆண்டு காலத்தில் ஐஆர்ஜிசி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. இந்நிலையில், நேற்று அமெரிக்கா மேற்கொண்ட பெரிய அளவிலான தாக்குதலில் பாம்பின் (ஐஆர்ஜிசி) தலை வெட்டப்பட்டது. இதன் மூலம் இனி ஐஆர்ஜிசி-க்கு தலைமையகம் என்பது இருக்காது. பூமியில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவப்படையை அமெரிக்கா கொண்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் தொடரும்” என அமெரிக்க ராணுவம் சமூக வலைதளத்தில் தெரிவித்துளளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஐஆர்ஜிசி (IRGC - Islamic Revolutionary Guard Corps) : ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த படைப்பிரிவாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) உள்ளது. கடந்த 1979-ல் இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை காமேனி நிறுவினார். அவரது அறிவுறுத்தலுக்கு இணங்க ஐஆர்ஜிசி செயல்பட்டது.

SCROLL FOR NEXT