வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை வெளியிட்டுள்ளார். அவற்றை ஏற்க மறுத்த ஈரான், பதிலுக்கு 5 கடுமையான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு ஈரான் மறுத்ததால், அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் ஆரம்பித்து 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், மேற்கு ஆசியாவுக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர 15 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாயின.
இதற்கிடையில், அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இதில் மத்தியஸ்தராக ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல் வெளியானது. ஈரானின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. ஆனாலும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது. ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து குறைந்து சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர 15 நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
>அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் பற்றி பேச ஒரு மாத காலத்துக்கு போர் நிறுத்தம்.
>ஈரான் அணு ஆயுதத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.
>யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த வேண்டும்.
>ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
>இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம்(ஐஏஇஏ) ஈரான் ஒப்படைக்க வேண்டும்.
>ஈரானின் நடான்ஸ், இஸ்ஃபஹன் மற்றும் ஃபோர்டோ ஆகிய பகுதிகளில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையங்களை மூடி, ஐஏஇஏ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
>அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்.
>ஏவுகணைகளின் எண்ணிக்கை மற்றும் இலக்கு தூரங்களுக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.
>எதிர்காலத்தில் தற்காப்புக்கு மட்டுமே ஏவுகணைகளைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு ஈரான் ஒப்புக் கொண்டால், ஈரான் மீதான தடை முழுவதுமாக நீக்கப்படும், அணு மின்சக்தி தயாரிப்புக்கு தேவையான உதவி செய்யப்படும். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஈரான் ராணுவ தலைமையகச் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராகிம் கூறுகையில், ‘‘ஒப்பந்தம் என்ற பெயரில் தோல்வியை மறைக்க அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கிறார். அவருடைய வெற்று வாக்குறுதிகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. அதிபர் ட்ரம்ப் அவருக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்துகிறார்’’ என்றார்.
மற்றொரு செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அலி அப்துல் லாஹி அலியாபாடி கூறுகையில், ‘‘முழு வெற்றி பெறும் வரை இந்த போர் தொடரும்’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 5 முக்கியமான நிபந்தனைகளை விதித்துள்ளது. அவற்றின் விவரம்.
>அமெரிக்கா - ஈரான் இடையே போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.
>ஈரான் மீது எதிர்காலத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என்பதற்கு சர்வதேச உறுதிமொழி தரவேண்டும்.
>வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை அகற்ற வேண்டும். அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும்.
>ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரானுக்கு முழுமையான கட்டுப்பாடு வேண்டும்.
>ஈரான் ஏவுகணை திட்டங்களில் எந்தவித கட்டுப்பாடோ, பேச்சுவார்த்தையோ கூடாது. இவ்வாறு ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
போரை நிறுத்துவதற்கு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ள 15 அம்ச திட்டம் குறித்து பாகிஸ்தானில் ஈரானுடன் இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை வெள்ளை மாளிகை செய்து வருகிறது.
எனினும் ஈரான் மீதான தாக்குதல் தொடர்கிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று குடியிருப்புப் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய செம்பிறை சங்கம் கூறியுள்ளது.
பதிலுக்கு சவுதி, பஹ்ரைன், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதிபர் ட்ரம்ப் அடுத்தடுத்து தனது கருத்துகளை மாற்றி மாற்றி பேசி வருகிறார். அனைத்தையும் ஈரான் மறுத்து வருவதால் மேற்கு ஆசியா பகுதியில் நடைபெறும் போர் நிற்பதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போதைக்கு தெரிய வில்லை என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க போர்க் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் மீது ஏவு கணை தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் அந்த கப்பல் தனது இருப்பிடத்தை மாற்றி வருவதாகவும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அமெரிக்காவின் ஆப்ரகாம் லிங்கன் போர்க்கப்பல் உட்பட 3 அதிநவீன போர்க்
கப்பல்களை மத்திய கிழக்குக் கடல் பகுதிக்கு அதிபர் ட்ரம்ப் அனுப்பி வைத்தார். அங்கிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், ஈரான் கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் ஷரம் ஈரானி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் அதன் துணை கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்தக் கப்பல் இடம் பெயர்ந்து வருவதை கண்காணித்து வருகிறோம். ஈரான் ஏவுகணையின் இலக்கு தூரத்துக்குள் வந்தவுடன் அதன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். ஆனால், இதை அமெரிக்கா உறுதி செய்யவில்லை.