இஸ்லாமாபாத்: மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு இறுதியான மற்றும் சிறந்த சலுகையை வழங்கிய பின்னர் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தன. இந்த போர்நிறுத்தம் 2 வாரங்களுக்கு மட்டும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்ப்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாதுகாப்புச் செயலர் அலி அக்பர் அகமதியான், ஈரான் மத்திய வங்கி ஆளுநர் அப்தோல் நாசர் ஹெம்மாட்டி ஆகியோரும் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார், உள்துறை அமைச்சர் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் இருதரப்புக்கும் இடையே சமரச தூதுவர்களாக செயல்பட்டனர்.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இன்று (ஏப்ரல் 12) அதிகாலையில் பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமெரிக்க அதிகாரிகள் ஈரானுடனான பேச்சுவார்த்தையிலிருந்து எந்தவொரு ஒப்பந்தமும் இன்றி வெளியேறி, அமெரிக்காவிற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளோம்.
21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தீவிர முயற்சிகளுக்குப் பிறகும், இரு தரப்பினராலும் கருத்து வேறுபாடுகளுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க முடியாததால், ஈரானுடனான இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் அற்புதமான விருந்தோம்பிகள்" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி வெளியிட்ட அறிக்கையில், “இரு தரப்பினராலும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை. ஆனல், இரு தரப்பினருக்கும் இடையே ஏராளமான செய்திகளும், தகவல்களும் பரிமாறப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பல விவகாரங்களில் ஒரு புரிதலை எட்டியுள்ளன. அதே வேளையில் இரண்டு முதல் மூன்று முக்கியமான விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. ஒரே ஒரு சந்திப்பிலேயே ஒரு முழுமையான ஒப்பந்தத்தை எட்டிவிட முடியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்பது இயல்பானதே. வேறு யாரும் கூட அத்தகைய எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கவில்லை."
இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றி என்பது எதிர் தரப்பின் தீவிரத்தன்மை மற்றும் நம்பிக்கையை சார்ந்துள்ளது. ஈரானின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் அங்கீகரிக்கப்படுவதைப் பொறுத்தே இந்த ஒப்பந்தம் ஏற்படும். இப்போது பந்து அமெரிக்காவின் கைகளில் உள்ளது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் ஈரானுக்கு எந்த அவசரமும் இல்லை" என்று கூறினார்.
இதுகுறித்து கானாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமெரிக்கா தனது துணை அதிபரை இஸ்லாமாபாத்திற்கு விமானத்தில் அனுப்பியது. 21 மணி நேரப் பேச்சுவார்த்தையில், போரின் மூலம் அடைய முடியாத அனைத்தையும் அவர்கள் கோரினர். ஆனால், ஈரான் ஒரு பெரிய இல்லை என்று கூறிவிட்டது. பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. ஹார்முஸ் ஜலசந்தி இன்னும் மூடப்பட்டுள்ளது. வான்ஸ் வெறுங்கையுடன் வீடு திரும்புகிறார். மீண்டும் ஈரானின் வார்த்தை மட்டுமே முக்கியமானது. மானத்தைக் காப்பாற்ற அவர்களுக்கு வேறு வழியே இல்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.