இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. அமெரிக்கா தரப்பில் 15 நிபந்தனைகளும், ஈரான் தரப்பில் 10 நிபந்தனைகளும் வலியுறுத்தப்பட்டன. இதில் பல்வேறு அம்சங்களில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தன. இந்த போர்நிறுத்தம் 2 வாரங்களுக்கு மட்டும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்ப்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத் வந்தடைந்தனர்.
ஈரான் தரப்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாதுகாப்புச் செயலர் அலி அக்பர் அகமதியான், ஈரான் மத்திய வங்கி ஆளுநர் அப்தோல் நாசர் ஹெம்மாட்டி ஆகியோரும் சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத்துக்கு வந்தனர்.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா நட்சத்திர ஓட்டலில் நேற்று பிற்பகலில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல்கட்டமாக, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குழுவினர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
‘அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிடவேண்டும். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். அணுசக்தி தளங்களை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கக் கூடாது. ஹிஸ்புல்லா, ஹவுத்தி, ஹமாஸ் உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுவினருக்கு ஆயுதம், நிதியுதவி வழங்கக் கூடாது’ என்பது உட்பட 15 நிபந்தனைகளை வான்ஸ் வலியுறுத்தினார்.
அதேபோல, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுவினரும் ஷெபாஸ் ஷெரீப்புடன் தனியாக பேச்சு நடத்தினர். அப்போது, ‘ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க ராணுவம் முழுமையாக நிறுத்த வேண்டும். ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அமெரிக்க ராணுவத் தாக்குதலில் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக் கூடாது’ என்பது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை ஈரான் தரப்பு வலியுறுத்தியது.
இதன்பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் குழுவினரிடம் பாகிஸ்தான் தரப்பில் விரிவான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்வேறு அம்சங்களில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார், உள்துறை அமைச்சர் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் இருதரப்புக்கும் இடையே சமரச தூதுவர்களாக செயல்பட்டனர்.
இறுதியில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினரும், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுவினரும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ‘ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்’ என்று ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அமெரிக்கா தரப்பில் ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ‘செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்க வேண்டும். அனைத்து கப்பல்களையும் அனுமதிக்க வேண்டும்’ என்று அமெரிக்கா வலியுறுத்தியது. அமைதிப் பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் சீனக் குழு முகாம்: பேச்சுவார்த்தை குறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: ஈரானுக்குத் தேவையான ஆயுத உதவிகளை சீனாவே மறைமுகமாக வழங்கி வருகிறது. குறிப்பாக, சிறிய ரக ஏவுகணைகள், ட்ரோன்கள், உதிரி பாகங்களை ஈரானுக்கு சீனா வழங்கி வருகிறது.
இந்த சூழலில், சீனாவின் அழுத்தம் காரணமாகவே தற்காலிக போர்நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புக்கொண்டது. சீனாவின் உயர்நிலைக் குழு தற்போது இஸ்லாமாபாத்தில் முகாமிட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அந்த ஒப்பந்த விதிகள் அமல்படுத்தப்படுவதற்கு சீனா உறுதி அளிக்கும். சீனா உறுதி அளித்தால் மட்டுமே ஈரான் பிரதிநிதிகள் அதில் கையெழுத்திடுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறக்க வாய்ப்பு
அமெரிக்காவின் மேரிலேண்டில் செய்தியாளர்களிடம் அதிபர் ட்ரம்ப் நேற்று கூறியதாவது: ஈரானின் ஆதரவோடு அல்லது ஈரானின் ஆதரவு இல்லாமலேயே ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும். இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு உதவ பல்வேறு நாடுகள் தயாராக இருக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தரப்பில் சுங்க வரி வசூல் செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வித கட்டணமும் இல்லாமல் சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்வதை அமெரிக்கா உறுதி செய்யும்.
அதேபோல, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதிலும் மிகவும் உறுதியாக உள்ளோம். இரு நாடுகள் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் அணு ஆயுத ஒழிப்பே பிரதான இடம்பிடிக்கும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.