புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்லம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: ரஷ்ய அதிபரின் இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது நடந்துகொண்டிருக்கும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை அடைவதற்கான மிக சாத்தியமான வழிமுறை ராஜதந்திர முயற்சிகள் மட்டுமே ஆகும். சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த முயற்சிகளில் மட்டுமே தங்களது முழு கவனங்களை செலுத்த வேண்டும். அதனை பலவீனப்படுத்தும் எந்தவொரு செயலை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து அதற்கு தீர்வாக பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை மட்டுமே பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திங்கள்கிழமை கூறுகையில், “மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு இடையில் நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது டிசம்பர் 28, 29 தேதிகளில் 91 ட்ரோன்களை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இவை இடைமறித்து வீழ்த்தப்பட்டன. இந்த சம்பவத்தில் எந்த சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்த தாக்குதல் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் கூறுகையில், “நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நான் மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டு பலவீனப்படுத்தும். இதனை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.