அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: போர் நிறுத்தத்துக்கு ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகளால் அதிபர் ட்ரம்ப் அதிருப்தியில் உள்ளதாகவும், அந்த நிபந்தனைகளை அவர் ஏற்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்வதில் இழுபறி நீடிக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஈரான் முன்வைத்த சமீபத்திய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரானின் புதிய நிபந்தனைகளில், உலகளாவிய முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதும், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஒத்திவைப்பதும் அடங்கும்.
நேற்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஈரானின் நிபந்தனைகள் குறித்து ட்ரம்ப் தனது சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்டார். இதனை தொடர்ந்து, ஈரானின் புதிய நிபந்தனைகளை ட்ரம்ப் ஏற்க வாய்ப்பில்லை என்று ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகள் மற்றும் அந்நாட்டின் அணு குண்டு தயாரிக்க தேவையான யுரேனியம் கையிருப்பு குறித்த சந்தேகங்களை தீர்க்காமல் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது, அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நிலையை பலவீனப்படுத்திவிடும் என்று அந்நாடு அச்சம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய நிலையில் வைத்திருப்பது, உலகளாவிய எரிபொருள் விலைகளின் உயர்வை நீடிக்கச் செய்து, அமெரிக்காவில் எரிபொருள் செலவுகள் உயர்வதற்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆலோசனையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க நிர்வாகம் எவ்வாறு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், ஈரானின் தலைமை இப்போது யார் கையில் உள்ளது என்பது குறித்தும் அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இப்போது யாரிடம் உள்ளது என்பதில் அமெரிக்க அதிகாரிகள் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர், இது ராஜதந்திர செயல்பாட்டை சிக்கலாக்குகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.