ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பாலி தீவில் அனுசரிக்கப்படும் இந்து சமயப் பண்டிகையை அவமதித்ததாக சுவிஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலியில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இத்தீவில் கடந்த வியாழக்கிழமை மவுன நாள் அனுசரிக்கப்பட்டது.
இத்தீவில் வசிப்பவர்களும் சுற்றுலாப் பயணிகளும், சுயசிந்தனைக்காக 24 மணி நேரம் தங்கள் வீடு அல்லது இருப்பிடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்பது இதன் விதியாகும். வேலை, பயணம், பொழுதுபோக்கு மற்றும் மின்சாரப் பயன்பாடு கூட தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் இப்பண்டிகை தொடர்பாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த லூசியன் ஆண்ட்ரின் ஸ்ராகன் என்ற சுற்றுலாப் பயணி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இப்பதிவில் அவர் அந்தப் பண்டிகையை அவமதிக்கும் வகையில் ஆபாச சொற்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஸ்ராகனை இந்தோனேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். இணையத்தில் வெறுப்புப் பேச்சை பரப்பியதாக ஸ்ராகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த குற்றத்துக்கு அவருக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.