டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் சங்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில், சந்தேக நபர்கள் இருவர் வங்கதேசத்தை விட்டு தப்பி சென்றுவிட்டதாகவும், அவர்கள் இந்தியாவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது என அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச மாணவர் சங்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி (32) தலைநகர் டாக்காவில் கடந்த 12-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, துப்பாக்கியால் சுடப்பட்டார். சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். இதனால் வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஹாடி கொலை வழக்கு தொடர்பாக டாக்கா கூடுதல் காவல் ஆணையர் நஸ்ருல் இஸ்லாம் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஹாடி கொலை வழக்கில் பைசல் கரீம் மசூத் மற்றும் அலாம்கிர் ஷேக் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுகின்றனர். அவர்கள் இருவரும் வங்கதேசத்தை விட்டு தப்பிவிட்டனர்.
மேகாலயா வழியாக: அவர்கள் மேகாலயா வழியாக இந்தியாவுக்குள் சென்றுவிட்டனர். மேகலயாவுக்கு சென்றவுடன் அவர்களை புர்தி என்பர் அழைத்துச் சென்றுள்ளார். பிறகு சாமி என்ற டாக்சி டிரைவர் அவர்களை மேகாலயாவின் துரா நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவ்வாறு நஸ்ருல் இஸ்லாம் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படைகள் மறுப்பு: வங்கதேசத்தில் மாணவர் சங்க தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடியை சுட்டுக் கொன்றவர்கள் மேகாலயாவின் ஹல்உகாட் எல்லை வழியாக இந்தியாவில் நுழைந்ததாக வங்கதேச போலீஸார் கூறுவதை இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும், மேகாலயா போலீஸாரும் மறுத்துள்ளனர்.
"எல்லையில் தீவர கண்காணிப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசம் தெரிவிப்பது தவறான கருத்து என மேகாலயாவில் உள்ள எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி உபாத்யாய் கூறியுள்ளார். "வங்கதேச கொலையில் சந்தேகிக்கப்படும் நபர்கள் காரோ மலைப் பகுதியில் இருப்பதாக எந்த உளவுத் தகவலும் வரவில்லை" என மேகாலயா காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.