எடின்பர்க்: உலக அறுவைச் சிகிச்சை தந்தை என்றழைக்கப்படும் மகரிஷி சுஸ்ருதரின் சிலை ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் திறக்கப்பட்டு உள்ளது.
பிரிட்டனின் ஒருங்கிணைந்த பகுதியான ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் ‘தி ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் ஆப் எடின்பர்க்’ என்ற மருத்துவ கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இந்த மருத்துவ கல்வி நிறுவனத்தில் உலக அறுவைச் சிகிச்சை தந்தை என்றழைக்கப்படும் மகரிஷி சுஸ்ருதரின் வெண்கல சிலை திறக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனின் பிரபல அறுவைச் சிகிச்சை நிபுணர் சந்திரா செருவு தனது சொந்த செலவில் சிலையை நிறுவி உள்ளார். தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த சிற்பிகள், மகரிஷி சுஸ்ருதரின் 90 கிலோ சிலையை நேர்த்தியாக வடிவமைத்து எடின்பர்க் நகருக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
கடந்த 6-ம் நூற்றாண்டில் உத்தர பிரதேசத்தின் வாராணசியில் மகரிஷி சுஸ்ருதர் வாழ்ந்தார். இவர் சிறுவயதிலேயே மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சையை கற்றுத் தேர்ந்தார். இன்றைய நவீன கால அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரிக்கு இவரே அடித்தளம் அமைத்தார்.
மகரிஷி சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை, உலகின் மிகவும் தொன்மையான மருத்துவ நூல் ஆகும். இந்த நூலில் அறுவைச் சிகிச்சை முறைகள் குறித்தும், ஆயுர்வேத மருத்துவம் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. 121 வகையான அறுவைச் சிகிச்சை கருவிகள், அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்து சுஸ்ருதர் ஆவணப்படுத்தி உள்ளார்.
மூக்கை இழந்தவர்களுக்கு அவர்களது நெற்றி, கன்னத்தில் இருந்து தோலை எடுத்து புதிய மூக்கை உருவாக்கும் நவீன பிளாஸ்டிக் சர்ஜரி அறுவைச் சிகிச்சையை சுஸ்ருதர் வெற்றிகரமாக மேற்கொண்டார். இதுவே உலகின் முதல் அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி ஆகும். சுமார் 300 வகையான அறுவைச் சிகிச்சைகளை அவர் வெற்றிகரமாக மேற்கொண்டு உள்ளார்.