ரியாத் / வாஷிங்டன்: உலக அளவில் நன்னீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறைகளைக் கடல் வழியே கப்பல்கள் மூலம் இழுத்து வந்து நன்னீராக மாற்றும் விசித்திரமான திட்டத்தை சர்வதேச விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மீண்டும் பரிசீலித்து வருகின்றனர்.
கடந்த 1977-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது அல்-பைசல், அரேபிய தீபகற்பத்தின் கடுமையான குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க இந்த யோசனையை முதன்முதலில் உலகுக்கு முன்வைத்தார். இத்திட்டத்தின் சாத்தியக்கூறை நிரூபிப்பதற்காக, அலாஸ்கா பகுதியில் இருந்த சுமார் 1.5 டன் எடையுள்ள மிகப்பெரிய பனிப்பாறை ஒன்றை ஐயோவா மாநிலத்துக்குப் பிரத்யேகக் கப்பல் மூலம் வெற்றிகரமாக இழுத்து வந்து செயல்முறை விளக்கமும் அளித்தார்.
அக்காலத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகள், பனிப்பாறை வழியிலேயே உருகுவதைத் தடுக்கும் முறைகள் இல்லாதது மற்றும் அதிகப்படியான கடற்போக்குவரத்துச் செலவு ஆகிய காரணங்களால் இத்திட்டம் வணிக ரீதியாகத் தொடரப்படாமல் கைவிடப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்துடன்...
இப்போது நவீனத் தொழில்நுட்பத்துடன் அந்த திட்டத்தை மறுபிரவேசம் செய்ய விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். தற்போது பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் நன்னீர் தட்டுப்பாடு உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேசப் பொறியாளர்கள் குழு இத்திட்டத்தை அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் மீண்டும் கையிலெடுத்துள்ளது. துருவப் பகுதியில் மிதக்கும் சரியான வடிவம் கொண்ட பனிப்பாறைகளை செயற்கைக்கோள் மூலம் கண்டறிதல். கடல் பயணத்தின்போது வெப்பத்தால் பனிப்பாறை உருகாமல் இருக்க, அதைச் சுற்றி வெப்பம் கடத்தா சிறப்பு உறைப் பூச்சுகளைப் பயன்படுத்துதல்.
குறைந்த எரிபொருளில் அதிக எடையைச் சுமந்து செல்லும் நவீனக் கப்பல்கள் மூலம் பனிப்பாறைகளைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வருதல் உள்ளிட்டவற்றில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு மிகப்பெரிய பனிப்பாறையைக் கொண்டு வருவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்குப் பல மாதங்களுக்குத் தேவையான தூய்மையான குடிநீரை வழங்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுச்சூழலுக்குப் பெரிய பாதிப்புகள் இன்றி இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இறுதி சாத்தியக்கூறுகள் குறித்து தீவிர ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.