பாரீஸ்: ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்து விட்டன. அதனால் போர்க்கள தகவல் தொடர்புகளுக்கு உக்ரைன் ராணுவம் தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டா்ர்லிங்க் அதிவேக இணைய சேவையைப் பயன்படுத்துகிறது.
இதனால் உக்ரைன் ராணுவத்துக்கு வர்த்தக ரீதியில் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கும் செயற்கைகோள்களை தாக்குவோம் என ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். கீழடுக்கு சுற்று வட்டப் பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் மீது தாக்குல் நடத்த எஸ்-500 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யா சமீபத்தில் கூறியது. விண்ணில் செயல் இழந்த செயற்கைக்கோள் மீது ஏவுகணையை வீசி தகர்க்கும் சோதனையை கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யா செய்தது.
இந்நிலையில் ஸ்டார் லிங்க் செயற்கைக் கோள்கள் மீது தாக்குதல் நடத்த வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கூரான இரும்பு துண்டுகளை ஆயுதமாக பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக நேட்டோ உளவுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இந்த இரும்பு துண்டுகளை சிறிய செயற்கைக் கோளில் எடுத்துச் சென்று பூமியிலிருந்து 550 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் ஆங்காங்கே தூவப்படும்.
இந்த கூர்மையான இரும்புத் துண்டுகள் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கு் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் மீது மோதி அவற்றை சேதப்படுத்தும். இந்த தாக்குதலில் செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் எளிதில் சேதம் அடைந்து விடும். இந்த ஆயுதம் அனைத்து நாடுகளின் செயற்கைக்கோள்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கீழடுக்கு சுற்றுவட்டப்பாதையின் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையம், சீனாவின் டியாங்காங் விண்வெளி மையம் ஆகியவையும் சேதம் அடையும் அபாயம் உள்ளது.