கொழும்பு விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரவேற்ற இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரா

 
உலகம்

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற ராஜ்நாத் சிங்குக்கு உற்சாக வரவேற்பு

மோகன் கணபதி

கொழும்பு: மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தலைநகர் கொழும்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரா கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்றார். மேலும், இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோரும் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர்.

கொழும்பு புறப்படுவதற்கு முன்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மூன்றுநாள் அரசு முறைப் பயணமாக இலங்கைச் செல்கிறேன். இந்த பயணத்தின்போது இலங்கை தலைவர்களுடன் மேற்கொள்ளப்படும் சந்திப்புகள் ஆக்கப்பூர்வமானவையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த பயணத்தின்போது இலங்கையில் உள்ள புலம்பெயர் இந்தியர்களுடன் கலந்துரையாட இருக்கிறேன்.

இலங்கையுடன் இந்தியாவுக்கு ஆழமான வரலாற்று மற்றும் பண்பாட்டு உறவுகள் உள்ளன. மேலும், இந்தியாவின் அண்டை நாடுகள் முதலில் மற்றும் மகாசாகர் ஆகிய முன்முயற்சிகளுக்கு இலங்கை மிகவும் முக்கியமான நாடு” என தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், ‘உயர்மட்டக் குழுவுடன் இலங்கை செல்லும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வலுவான கடல்சார் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன்சார்ந்த துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இலங்கைத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலுக்குப் பிந்தைய புனரமைப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதி உதவியை இந்தியா அறிவித்திருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இருதரப்பு ஈடுபாடு ஒரு புதிய தீவிரத்தை அடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பும் தற்காப்பும் கூட்டாண்மையின் மிக முக்கிய அம்சங்கள் என்று கூறியுள்ள அவர், ராஜ்நாத் சிங்கின் பயணம் தற்போதைய பாதுகாப்பு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் என்றும், இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT