டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவராக அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 28-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் 88 மத குருக்கள் அடங்கிய சபை ஈடுபட்டது. இந்த சபை ஓட்டெடுப்பு மூலம் மறைந்த தலைவர் அயத்துல்லா காமேனியின் மகன் மோஜ்தபா காமேனியை 3-வது உச்ச தலைவராக தேர்வு செய்தது. இனிமேல் ஈரானின் அனைத்து விஷயங்களிலும் மோஜ்தபா காமேனி முடிவெடுப்பார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஈரான் தலைவர் நியமனத்தில் அமெரிக்காவின் ஒப்புதல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் நீண்ட காலம் இருக்க முடியாது’’ என கூறியிருந்தார்.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,332 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர்காலிபவ் நிபந்தனையின்றிசரணடைய வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், ‘‘ஈரான் சண்டை நிறுத்தம் கோரவில்லை, தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்கும்’’ என முகமது பக்கர் கூறியுள்ளார். ஈரானின் மூத்த தலைவர்களை எல்லாம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ராணுவத் தலைவராக அறிவிக்கப்பட்ட அபால்காசிம் பபையன் கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பல்களின் இருப்பிடம் மற்றும் அந்நாட்டு ராணுவம் எங்கிருந்து தாக்குகிறது என்பது போன்ற முக்கிய உளவுத் தகவல்களை ஈரானுக்கு ரஷ்யா வழங்குவதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து: இந்த சூழலில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபாவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். ‘ஈரான் போரை சந்திக்கும் நேரத்தில், உயர் பதவிக்கு வந்துள்ள உங்களுக்கு அதிக தைரியமும், அர்ப்பணிப்பும் தேவை என்பதில் சந்தேகம் இல்லை. ஈரான் மற்றும் எங்களது ஈரான் நண்பர்களுக்கு ரஷ்யாவின் முழு ஆதரவு உள்ளது’ என்று புதின் அதில் குறிப்பிட்டுள்ளார்.