டாக்கா: கடந்த 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
அப்போதைய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகும், ஹசீனா ஆதரவாளரும் 1971 விடுதலைப் போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் (76) மட்டுமே அரசியல் சாசனப் பதவியான அதிபர் பொறுப்பில் நீடித்து வந்தார்.
பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான தற்போதைய புதிய அரசுடன் ஏற்பட்ட இணக்கமற்ற அரசியல் சூழல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக முகமது ஷஹாபுதீன் தனது பதவியை 2 வாரங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 13, வேட்புமனு பரிசீலனை ஆகஸ்ட் 16, மனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள் ஆகஸ்ட் 18 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.