பெய்ஜிங்: சீனாவிற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குழுவினர், ஏர் போர்ஸ் விமானத்தை விட்டு இறங்கும் போதே தங்களது செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை ‘பாரடே’ என்ற பைகளில் (Faraday bags) வைத்துவிட்டுச் சென்றனர். இதற்குள் இருந்தால் யாரும் ஹேக் செய்து தகவல்களை திருட முடியாது. அதிபர் ட்ரம்ப்புடன் சென்ற குழுவினர் 2 நாள் பயணத்தில் தற்காலிக போன்கள் (பர்னர் போன்) மற்றும் தற்காலிக மின்னஞ்சல் முகவரிகளை மட்டுமே பயன்படுத்தினர்.
சீனா சென்ற அமெரிக்க குழுவினருக்கு, சீன அதிகாரிகள் ஏராளமான பரிசுப் பொருட்கள், அடையாள அட்டைகள், பேட்ஜ்கள், அழைப்பிதழ்கள் போன்றவற்றை வழங்கினர்.
அமெரிக்க குழுவினர் சீனாவை விட்டு புறப்படும்போது, அவர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சீனா தொடர்பான எந்த பொருட்களும் அதிபரின் விமானத்துக்குள் கொண்டு வரக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்காக மிகப் பெரிய குப்பை தொட்டியும் விமானத்தின் படிக்கட்டு அருகில் வைக்கப்பட்டது. அதில் சீன பரிசுப் பொருட்கள் உட்பட சீனாவில் வழங்கப்பட்ட அனைத்தையும் அதிபர் ட்ரம்ப்புடன் வந்த அமெரிக்க அதிகாரிகள் மற்றும் குழுவினர் வீசி எறிந்தனர்.
உளவு பார்ப்பதில் சீன நிபுணர்கள் கில்லாடிகள் என்பதால், சீனா பரிசளித்த பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் குப்பையில் வீசி aஎறிய உத்தரவிடப்பட்டது.