நியூயார்க்: ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கடுமையாக கண்டித்துள்ளார். சமூக செயற்பாட்டாளர் மலாலாவும் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோரான் மம்தானி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் நடத்தப்பட்ட ஈரான் மீதான இன்றைய ராணுவத் தாக்குதல்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரில் பேரழிவை அதிகரிக்கும். நகரங்களில் குண்டுவீச்சு, பொதுமக்களைக் கொல்வது, ஒரு புதிய போர் அரங்கைத் திறப்பது போன்றவற்றை அமெரிக்கர்கள் விரும்பவில்லை. அவர்கள் மற்றொரு போரை விரும்பவில்லை. அவர்கள் விலைவாசி உயர்வு நெருக்கடியிலிருந்து நிவாரணம் பெற விரும்புகிறார்கள். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு நியூயார்க்கரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் நான் கவனம் செலுத்துகிறேன். எங்கள் போலீஸ் கமிஷனர் மற்றும் அவசரகால மேலாண்மை அதிகாரிகளுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அரசின் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பது மற்றும் மிகுந்த எச்சரிக்கை வாய்ந்த இடங்களில் ரோந்துகளை மேம்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.
கூடுதலாக, நியூயார்க்கில் வசிக்கும் ஈரானியர்களிடம் நான் நேரடியாகப் பேச விரும்புகிறேன். நீங்கள் இந்த நகரத்தின் கட்டமைப்பின் ஒரு பகுதி. நீங்கள் எங்கள் அண்டை வீட்டார். சிறு வணிக உரிமையாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள். நீங்கள் இங்கே பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்றார்.
இதற்கிடையில், நோபல் பரிசு பெற்ற சமூக செயற்பாட்டாளர் மலாலா யூசுப்சாய், மினாபில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி மீதான தாக்குதல் உட்பட, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்த பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீதான தாக்குதலில் 85க்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டனர்.
மலாலாவின் எக்ஸ் பதிவில், " எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் மற்றும் கனவுகளுடன் பள்ளிக்குச் சென்ற பெண்கள் அவர்கள். இன்று, அவர்களின் வாழ்க்கை கொடூரமாக துண்டிக்கப்பட்டது. ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் நான் மனம் உடைந்து திகைத்துப் போனேன்.
தெற்கு ஈரானில் ஒரு பெண்கள் பள்ளி தாக்கப்பட்டு, பல பெண்கள் இறந்ததாக வெளியான செய்திகள் உட்பட, பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் கொல்லப்படுவது மனசாட்சிக்கு புறம்பானது, அதை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன்.
வன்முறையில் பள்ளிகள் மற்றும் பொதுமக்களை குறிவைப்பதை நான் உறுதியாக எதிர்க்கிறேன். பிராந்தியம் முழுவதும் வன்முறை அதிகரிப்பதை முடிவுக்குக் கொண்டுவர நான் அழைப்பு விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.