“ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
இந்தச் சூழலில் மவுனம் என்பது நடுநிலையல்ல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை அது எளிதாக்கும். சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்த நிலையில், மவுனம் என்பது பொறுப்பைத் துறப்பதாகும்.” - இது காமேனி படுகொலை தொடர்பாக இந்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுப்பிய கேள்வி.
இந்தியாவின் இந்த மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அவற்றை சற்று தெளிவாகப் பார்ப்போம்.
1. முதல் காரணமாக, இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறிப்பிடலாம். இந்தியா பல ஆண்டுகளாகவே இஸ்ரேலுடன் நட்புறவில் இருக்கிறது. இந்த உறவு சமீப ஆண்டுகளில் பன்மடங்கு வலுப்பெற்றுள்ளது. 2017-ல் இஸ்ரேலுக்கு மோடி சென்றார். அதேபோல், 2018-ல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை மோடி இந்தியாவுக்கு வரவேற்று உபசரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, “இஸ்ரேலுடன் இந்தியா எப்போதும் உறுதிபட நிற்கும்.” என்று பேசினார்.
அந்த அடிப்படையில் பார்த்தால், பிராந்திய ஸ்திரத்தன்மையை வலியுறுத்தும் வழக்கத்திலிருந்து விடுபட்டு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது எனலாம். இஸ்ரேல் தாக்குதல், ஈரானின் பதில் தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேல் பிரதமர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவர்களிடம் பேசிய மோடி, ஈரான் தலைவர்களிடம் பேசவில்லை. மேலும், “இந்த இக்கட்டான சூழலில் இஸ்ரேல், யூதர்களுக்கு ஆதரவாக மோடி இருப்பதற்கு நன்றி” என்று மோடி தொலைபேசி உரையாடலுக்கு ரியாக்ட் செய்திருந்தார் நெதன்யாகு.
2. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையேயான உறவு மங்கி வருவதும், இந்தியாவின் மவுனத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்க பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் 2018 முதலே இந்தியா ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது பூஜ்ஜிய நிலைக்கு வந்துவிட்டது. 2018-ல் இந்தியா - ஈரான் இடையேயான வர்த்த மதிப்பு 17 பில்லியன் டாலர் என்றளவில் இருந்து 2025-ல் இது வெறும் 1.68 பில்லியன் என்றளவுக்கு சரிந்துள்ளது. ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் முதலீடு செய்வதையும் இந்தியா கைவிட்டுவிட்டது.
சபாஹர் துறைமுகம்
மேலும், ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகப் பணிகளை இந்தியா மேற்கொள்ள அமெரிக்க அளித்த தற்காலிக தடை நீக்கமானது ஏப்ரலுடன் முடிவடைகிறது. அதனால் அங்குள்ள ஷாஹித் பெஹெஸ்தி முனையத்தை கையாள்வதை இந்தியாவும் அத்துடன் முடித்துக் கொள்ளும். இப்போது ஏற்பட்டுள்ள மோதலில், சபாஹர் துறைமுகத்தின் கோனார்க் விமான நிலையத்தை இஸ்ரேலிய ஏவுகணைகள் பதம்பார்த்துள்ளன. இத்தகைய சூழலில், ஈரானுடனான கடைசி பிணைப்பைக் கூட இந்தியா துறக்கும் நிலையில்தான் இருக்கிறது.
3. மூன்றாவது, இந்தியா - ஈரான் இடையேயான அரசியல் பிணக்குகளைக் காரணமாக சுட்டிக் காட்டலாம். 1994-ல், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் காஷ்மீர் பற்றி இந்தியா கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை பாகிஸ்தான், அரபு நாடுகளுடன் சேர்ந்து ஈரானும் புறக்கணித்தது.
2017-ல் மத்திய அரசின் காஷ்மீர் கொள்கையைப் பற்றி காமேனியின் விமர்சனம் அரசு விரும்பத்தக்கதாக அமையவில்லை. அதேபோல், 2019-ல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்தான பின்னர் டெல்லியில் 2020-ல் நடந்த கலவரத்தை, ‘இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலைகளுக்கான சாட்சி’ என்று காமேனி விமர்சித்திருந்ததும் ஒரு கசப்பனுபவம்.
4. காமேனி படுகொலை மீது இந்தியாவின் மவுனத்துக்கு, வளைகுடா உறவில் இந்தியா சமரசம் செய்து கொள்ள விரும்பாததையும் பட்டியலிடலாம். ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள எண்ணெய் வளங்கள் சார்ந்த கட்டுமானங்களை குறிவைத்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயத் குறுகிய பயணமாக டெல்லி வந்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தச் சூழலில் ஈரானை ஆதரிப்பது என்பது வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் சுமார் 1 கோடி இந்தியர்கள் பாதுகாப்பை இழக்க முடியாது. ஈரானில் வெறும் 5000 இந்தியர்களும், இஸ்ரேலில் 20 ஆயிரம் இந்தியர்களுமே உள்ளனர். இந்த ஒப்பீட்டை இந்தியா கருத்தில் கொண்டுள்ளது.
மேலும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைத்ததால், இந்தியா கடந்த சில மாதங்களாக வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளைத்தான் நம்பியிருக்கிறது. இப்போது ஈரானை ஆதரிப்பது எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
5. கடைசியாக, நடுவில் கொஞ்சம் வாடிப்போய் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ள இந்திய - அமெரிக்க உறவு. இந்தியாவுக்கு விதித்த இறக்குமதி வரிகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தமும் முடிவாகியுள்ளது.
மேலும், அமெரிக்கா தனது பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியில் இந்தியாவைச் சேர்த்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளுக்காக அமெரிக்க அதிகாரிகள் குழு இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளது.
இருப்பினும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் பல வாரங்களுக்கு தொடரக்கூடும் என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கப் படைகளை ஈரானுக்கு அனுப்புவதற்குத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதால், ஈரானுக்கு ஆதரவாக இந்தியா பேசுவதில் அதை கடினமான சூழலுக்குத் தள்ளியுள்ளது.
அதேவேளையில், உலகளாவிய தெற்கு கொள்கையிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டு புதுடெல்லி பிரிக்ஸ் மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. இதில் ஈரானும், ஐக்கிய அரபு அமீரகமும் இருக்கின்றன. இப்போதைய சூழலில் இந்த இரு நாடுகளும் எதிரெதிராக உள்ளன. இந்தச் சூழலில் யார் பக்கம் பேசுவது என்பது இந்தியாவுக்கு நெருக்கடி.
ஆகவே, இஸ்ரேலுடனான நெருக்கம், ஈரானுடனான மங்கிப்போன உறவு, அமெரிக்காவின் அழுத்தங்கள், காமேனியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் உடன் இந்தியா வலுப்படுத்தி வரும் உறவு ஆகியனவற்றை காமேனி படுகொலையில் இந்தியா காட்டும் மவுனத்தின் காரணிகளாக புரிந்துகொள்ளலாம்.
உறுதுணைக் கட்டுரை: ‘தி இந்து’ ஆங்கிலம்