மொஜ்தபா காமேனி
தெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகமான யெடியோத் அஹ்ரோனூத்தை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிக்கும், அமெரிக்கா மீடியேட்டர் ஸ்டீவ் விட்காஃபுக்கும் இடையே நடந்த இரு தரப்புக்கான பேச்சுவார்த்தை குறித்த உரையாடலுக்கு, ஈரானின் உச்ச தலைமை ஒப்புதல் அளித்துள்ளது என்று அஹ்ரோனூத் ஊடக செய்தியை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துகளை நிராகரித்திருந்தார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரின் கடந்த 24 நாட்களில், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், உலகளாவிய முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மிக விரைவில் திறக்கப்படும் என்றும், இந்த நீர்வழிப்பாதையை அமெரிக்காவும் ஈரானும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
நேற்று புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானுடன் தற்போதைய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தால், அந்த ஜலசந்தி மிக விரைவில் திறக்கப்படும். இந்த ஜலசந்தி கூட்டாகக் கட்டுப்படுத்தப்படும்.
நானும் அயதுல்லாவும், அந்த அயதுல்லா யாராக இருந்தாலும் சரி, இணைந்து கட்டுப்படுத்துவோம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து இப்போது அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு நாளைக்கு 15 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயையும், 5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் பொருட்களையும் செல்கிறது. இது உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 25 சதவீதத்தைக் குறிக்கிறது.