

நாள்: பிப்ரவரி 26. இடம்: ஜெனிவா. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. உரையாடலை நெறிப்படுத்திய ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல் புஸைதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கை கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது என்று அறிவித்தார்.
தங்களிடம் அணு ஆயுதம் இல்லை என்றும், இனி ஒருபோதும் அணு ஆயுதத்தைத் தயாரிக்க மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளிப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், அமெரிக்காவுக்கோ இஸ்ரேலுக்கோ எந்த உடன்படிக்கையும் உறுதிமொழியும் தேவையாக இல்லை. ஓமன் அமைச்சரின் அறிவிப்பு வெளியான 36 மணி நேரத்தில், பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டு மழை பொழிந்தன.
ஈரானின் எதிர்த் தாக்குதல்
போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். உடன் அவருடைய குடும்பத்தினர் பலரும் ராணுவத் தளபதிகளும் கொல்லப்பட்டனர். அது ரமலான் மாதத்தின் பத்தாம் நாள். அதே நாளில், மினாப் என்கிற நகரில் ஒரு பள்ளிக்கூடம் தாக்கப்பட்டது.
150 சிறுமிகளும் 25 ஆசிரியர்களும் கொலையுண்டனர். இப்போது போரின் நான்காவது வாரத்தில் இருக்கிறோம். முதல் மூன்று வாரங்களில் 1,500க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதுவரை சுமார் 18,500 பேர் காயமடைந்துள்ளனர்.
மூன்று லட்சம் ஈரானியர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். 60,000க்கும் மேற்பட்ட வீடுகளும், 500 பள்ளிக்கூடங்களும், பல மருத்துவமனைகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. தவிர, லெபனான் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தி ஏறக்குறைய 1,000 லெபனான் நாட்டினரை இஸ்ரேல் கொன்றிருக்கிறது.
மேலும், டெஹ்ரானில் நான்கு எண்ணெய்க் கிணறுகளை இஸ்ரேல் தாக்கியிருக்கிறது. பற்றி எரிந்த பெருநெருப்பால் காற்று மாசுபட்டு, ஒரு கோடி மக்கள் வாழும் அந்த நகரில் அமில மழை பொழிந்தது. வல்லுநர்கள் இதன் நீண்ட கால விளைவுகள் அபாயகரமானவையாக இருக்கும் என்கின்றனர்.
தாக்குதல்கள் மேற்கு ஆசியாவோடு நிற்கவில்லை. தெற்கு ஆசியாவுக்கும் நீண்டது. இந்தியாவின் அழைப்பின் பேரில் கடற்படை அணிவகுப்பில் பங்கேற்று, நாடு திரும்பிக்கொண்டிருந்த ஐ.ஆர்.ஐ.எஸ். தேனா என்கிற ஈரானியக் கப்பலை இந்தியப் பெருங்கடலில் மார்ச் 4 அன்று நீர்மூழ்கியால் தாக்கி மூழ்கடித்தது அமெரிக்கா.
87 கடற்படையினர் சடலங்களாகவும், 32 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். 61 கடற்படையினரைக் காணவில்லை. உச்சத் தலைவரும் அவரது சகாக்களும் கொல்லப்பட்டதும் ஈரான் சரணடைந்துவிடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதியிருக்கலாம். ஆனால், ஈரான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்தது.