டெல் அவிவ்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
“ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும். மதவாத சக்திகள் அழிக்கப்படும். அந்த நாட்டில் புதிய புரட்சி மலரும். ஈரானின் 47 ஆண்டு கால அராஜகத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் முன்னெடுத்த பேச்சுவார்த்தை காரணமாக மேற்காசியாவில் கடந்த பிப்.28-ல் தொடங்கிய போர் இரண்டு வார காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் ஏற்றுக் கொண்டது. இதன் பின்னணியில் இரு தரப்பிலும் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இரண்டு வார காலம் நிறுத்திவைக்கும் அதிபர் ட்ரம்ப்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது. உடனடியாக ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து, அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஈரான் உறுதி செய்ய வேண்டும்.
உலகுக்கு அணுசக்தி, ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஈரான் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சியை இஸ்ரேல் ஆதரிக்கிறது. போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஈரானுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் இது உறுதி செய்யப்படும் என அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது. இந்த இடைக்கால போர்நிறுத்தத்தில் லெபனான் மீதான தாக்குதல்கள் அடங்காது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.