உலகம்

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

டெக்ஸ்டர்

வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகு ஆகியோருடன் மிகச்சிறந்த உரையாடல்களை மேற்கொண்டேன்.

தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில், இன்று முதல்  10 நாட்கள் போர் நிறுத்தத்தைத் தொடங்க இந்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த 34 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்விரு நாடுகளும் வாஷிங்டன் டி.சி.யில் எங்களது சிறந்த வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தன.

நிரந்தர அமைதியை எட்டுவதற்காக, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுடன் இணைந்து செயல்பட எங்களது துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், செயலாளர் ரூபியோ மற்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி டான் ரேசின் கெய்ன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன். உலகம் முழுவதும் 9 போர்களைத் தீர்த்து வைத்தது எனக்குக் கிடைத்த கௌரவம்; இது நான் நிறுத்திய 10-வது போராக அமையும். எனவே, இதைச் செய்து முடிப்போம்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

மற்றொரு பதிவில் ட்ரம்ப் "இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு அழைக்க உள்ளேன். 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் முதல் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக இது இருக்கும். இரு தரப்புமே அமைதியை விரும்புகின்றன; அது மிக விரைவில் நடக்கும் என்று நான் நம்புகிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT