ஜெருசலேம்: இஸ்ரேல் மீது தொடர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் ஈரான், என் மகன்களில் ஒருவரை படுகொலை செய்ய முயற்சி செய்தது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, “ஈரான் அரசு எனது மகன்களில் ஒருவரை இலக்கு வைத்து படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
இஸ்ரேலில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராணுவத் தலைவர் காடி ஐசன்கோட்டிற்கு உள்நாட்டுப் பாதுகாப்பு முகமை 24 மணி நேரப் பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும். இது ஆடம்பரம் அல்ல, அவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றால் ஈரானின் சதித் திட்டங்கள் வெற்றி பெற்றுவிடும்" என தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், ஈரானால் எந்த மகன் குறிவைக்கப்பட்டார், இந்த சதி முயற்சி எப்போது நடைபெற்றது என்ற விவரங்களை அவர் விரிவாக வெளிப்படுத்தவில்லை. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே கடுமையான பதற்றம் நிலவி வரும் சூழலில், பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.