ஈரானின் தூதர் அமீர் சயீத் இரவானி

 
உலகம்

‘எங்கள் கப்பலை இந்தியப் பெருங்கடலில் மூழ்கடித்தது போர்க்குற்றம்!’ - ஐ.நாவில் ஈரான் குற்றச்சாட்டு

வெற்றி மயிலோன்

நியூயார்க்: இந்திய பெருங்கடலில் ஐஆர்ஐஎஸ் தேனாவை மூழ்கடித்த அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறியது, போர்க்குற்றம் என்று ஈரான் ஐ.நா.வில் குற்றம் சாட்டியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இரவானி, “ஈரானின் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 2,000 மைல்கள் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா ஓர் ஆபத்தான ஆக்கிரமிப்புச் செயலை செய்தது. நல்லெண்ணப் பயணத்தில் இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் சுமார் 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற ஈரானிய போர்க்கப்பலான தேனா சர்வதேச நீரில் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா ஒரு போர்க்குற்றத்தைச் செய்தது. இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோத தாக்குதல் சட்டம் மற்றும் கடல்வழி சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையின் கடுமையான மீறலாகும்.

          

மேலும், தனது நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவ நடவடிக்கையை நிறுத்த உறுதியாகவும், தெளிவாகவும், தாமதமின்றியும் தலையிட வேண்டும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நமது மக்களுக்கு எதிராகச் செய்து வரும் ஆக்கிரமிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைக் கண்டிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் செயலாளரை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஈரானுக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் அனைத்து குற்றங்கள் மற்றும் ராணுவத் தாக்குதல்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர கட்டாயப்படுத்த வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் போர்க்குற்றங்களின் மீதான இந்த கடுமையான மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT