புதுடெல்லி: ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டு, அவர்கள் பரிந்துரைக்கும் வழித்தடங்களை பயன்படுத்தி ஈரானிலிருந்து வெளியேற வேண்டும். இதன்மூலம் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியும்.
அதேநேரத்தில் தூதரக அதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமல் சர்வதேச தரை வழி எல்லையை கடந்து செல்லும் முயற்சியில் இந்தியர்கள் ஈடுபட வேண்டாம். இவ்வாறு இந்தியத் தூதரகம் அறிவிப்பில் கூறியுள்ளது.
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன்னதாக ஈரானிலிருந்து இதுவரை 1,700-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் நில எல்லைகள் வழியாக அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.