வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வருகிறது.
வரி விதிப்பு தொடர்பாக இருநாடுகளின் மூத்த அதிகாரிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் ட்ரம்பை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுமாறு அறிவுறுத்தினேன். ஆனால் எனது கோரிக்கையை இந்திய குழுவினர் ஏற்கவில்லை. அதிபர் ட்ரம்பிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி போனில் பேச மறுத்ததால் இரு நாடுகள் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முடங்கியிருக்கிறது.
எனினும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அதிபர் ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அந்த நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகிவிட்டது.
மூன்று வாரங்களுக்கு பிறகு இந்திய அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டனர். அப்போது “3 வாரங்களுக்கு முன்பே ரயில் புறப்பட்டு சென்றுவிட்டது. இனிமேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று தெளிவாக கூறிவிட்டேன். இதே பிரச்சினையின் போது பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அதிபர் ட்ரம்பை தொடர்பு கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டார். இவ்வாறு லுட்னிக் தெரிவித்தார்.