உலகம்

விமான நிலையங்கள் மூடல்: வளைகுடா நாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கான இந்தியர்கள்

டெக்ஸ்டர்

துபாய்: மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், துபாய், ஷார்ஜா போன்ற முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, வங்காள நடிகை சுபாஸ்ரீ கங்குலி உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர்.

          

பிரிட்டனில் நடைபெறவுள்ள ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்ற பி.வி. சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகிலேயே ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும், இதனால் நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக இருப்பதாகவும் சிந்து தனது சமூக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், தனது மகனுடன் துபாயில் சிக்கியுள்ள நடிகை சுபாஸ்ரீ கங்குலி, தாங்கள் தங்கியிருக்கும் பாம் ஜுமேரா ஹோட்டலுக்கு அருகிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சஞ்சய் சுக்லா உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்டோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ளனர். சஞ்சய் சுக்லா வெளியிட்ட வீடியோவில், அவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு கரும்புகை எழும்புவதைக் காண முடிகிறது. 

புனேவைச் சேர்ந்த 84 எம்பிஏ மாணவர்களும் கல்விச் சுற்றுலாவுக்காகச் சென்று தற்போது நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். ஷார்ஜா விமான நிலையத்தில் சிக்கியுள்ள பலர், கையில் போதிய பணமோ அல்லது அத்தியாவசிய மருந்துகளோ இல்லாமல் தவிப்பதாக மத்திய அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், வான்வெளிப் போக்குவரத்து சீரானதும் இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. இந்த சூழலில் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே சுமார் 50 சர்வதேச விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT