வாஷிங்டன்: ஈரானுடனான போர்நிறுத்தம், போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது என அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடுத்தது. இது குறித்த அறிவிப்பை, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அதிபர் ட்ரம்ப் கடந்த மார்ச் 2-ம் தேதி தெரிவித்தார். அமெரிக்காவின் போர் அதிகார சட்டப்படி, போர் நடவடிக்கைக்கு, 60 நாட்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைக்காவிட்டால், அதன்பின் போர் நடவடிக்கையை அதிபர் திரும்ப பெற வேண்டும். இந்த 60-வது நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது.
இதனால் சட்டப்படி போரின் 60-வது நாளான மே 1-ஆம் தேதி, ஈரானுடனான போருக்கு டிரம்ப் நிர்வாகம் நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோருமா என்று ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் டிம் கெய்ன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத், ‘‘ஈரானுடனான போர்நிறுத்தம், போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது’’ என்றார்.
இந்த காலக்கெடு முடிவடைவது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சனிடம் கேட்டபோது, "அமெரிக்கா போர் நிறுத்தத்தில் உள்ளது. ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படவில்லை. ஈரானுடன் அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா முயன்று வருகிறது’’ என்றார்.