உலகம்

போரில் இதுவரை 3,375 பேர் உயிரிழப்பு: ஈரான் தடயவியல் துறைத் தலைவர் தகவல்

வெற்றி மயிலோன்

தெஹ்ரான்: ஈரானுக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புதிய எண்ணிக்கையை ஈரான் வெளியிட்டுள்ளது. இப்போரில் இதுவரை 3,375 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் தடயவியல் துறைத் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெதி தெரிவித்தார்.

ஈரான் நீதித்துறையின் ‘மிசான்’ செய்தி நிறுவனம் மற்றும் பிற ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ஈரான் தடயவியல் அமைப்பின் தலைவரான அப்பாஸ் மஸ்ஜெதி இந்த தகவலை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்களில் நால்வர் மட்டுமே இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளனர் என மஸ்ஜெதி கூறினார்.

அவர் அளித்த தகவல்களில், உயிரிழந்தவர்களில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை குறித்த தனித்தனி விவரங்கள் இடம்பெறவில்லை. அதே நேரத்தில், உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்கள் என்றும், 496 பேர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், உயிரிழந்தவர்களில் 383 பேர், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்றும் மஸ்ஜெதி தெரிவித்தார்.

இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஈரானின் சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.

கடந்த வாரம் ஈரான் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை அறிவித்த பிறகு, அமெரிக்கா மேற்கொண்ட முதல் கைப்பற்றும் நடவடிக்கை இதுவாகும்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கடற்கொள்ளைச் செயல் என்றும், போர்நிறுத்த ஒப்பந்த மீறல் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளதுடன், இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், அமெரிக்க நடவடிக்கையானது, தற்போதைய போர் நிறுத்தத்தின் நிலைத்தன்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும், உலகளாவிய எரிபொரூள் விநியோகத்தில் நீண்டகாலத் தடை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளன.

SCROLL FOR NEXT