பீஜிங்: உக்ரைனுடன் போர் நிறுத்தம் செய்ய ரஷ்யாவை சீனா வலியுறுத்த வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சென்றுள்ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்தார். அதன்பின் மேக்ரான் அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்வதேச ஒழுங்கு முறை காரணமாக பல ஆண்டுகளாக உலகில் அமைதி நிலவி வந்தது. அந்த ஒழுங்கு சிதையும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனா - பிரான்ஸ் இடையேயான பேச்சுவார்த்தை மிக முக்கியமானது. உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதனால் கூடிய விரைவில் இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எங்களின் முயற்சியில் சீனா இணையும் என நம்புகிறேன். இவ்வாறு மேக்ரான் கூறினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அளித்த பேட்டியில்,"அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் சீனா ஆதரிக்கிறது. அனைத்து தரப்பினரும் ஏற்கும்படியான அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். காசாவின் மீட்பு பணிக்கு சீனா 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிக்கவுள்ளது. ஏரோஸ்பேஸ், ஏரோனாடிக்ஸ், அணு சக்தி, பசுமை தொழில்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் அதிக ஒத்துழைப்புடன் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளோம்" என்றார்.