நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

 
உலகம்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொலை: மெக்சிகோவில் வன்முறை

இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

வேட்டையன்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

‘எல் மென்சோ’ என அறியப்படும் நெமேசியோ ஒசேகுரா, அந்நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் சிஜேஎன்ஜி என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்தார். 59 வயதான அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். அவரை கைது செய்ய தகவல் கொடுப்பவர்களுக்கு 15 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என இரண்டு நாடுகளும் அறிவித்தன.

          

ஏனெனில், தனது கூட்டத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைவர் பொறுப்புக்கு வந்த நெமேசியோ ஒசேகுரா, தனது குழுவின் செயல்பாடு மூலம் எதிரிகள் மற்றும் பாதுகாப்பு படையை கடுமையாக தாக்கி வந்தார். அந்த தாக்குதல் மிகவும் கொடூரமானதாக இருக்கும் என தகவல். அவர் சார்ந்துள்ள கும்பலை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. மெக்சிகோவில் இருந்து கொக்கைன், ஹெராயின், மெத்தபெட்டமைன், ஃபெண்டானில் உள்ளிட்ட போதைப்பொருளை அமெரிக்காவுக்கு இவரது கும்பல் கடத்துகிறது.

முன்னதாக, மெக்சிகோ அரசு போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். குறிப்பாக ஃபெண்டானில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், மெக்சிகோவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார். போதைப்பொருள் கும்பலின் செயல்பாட்டை தடுக்கும் செயலில் மெக்சிகோ அதிபர் கிளாடியா தலைமையிலான அரசு மேற்கொள்ளவில்லை என அவர் கூறி வந்தார்.

இந்த சூழலில் ராணுவ நடவடிக்கையில் நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்டதாக மெக்சிகோ அறிவித்தது. ராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டபல்பாவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நடமாட்டம் உள்ள பகுதியில் சோதனை நடந்தது.

அப்போது இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த நெமேசியோ ஒசேகுரா உயிரிழந்தார். உயிருக்கு போராடிய அவரை வான்வழியாக மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்ல முயன்ற போது அவர் மரணமடைந்ததாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்ட செய்தியை அறிந்து அவரது ஆதரவாளர்கள் மெச்சிகோவில் வன்முறையில் இறங்கினர். பல்வேறு மாகாணங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்டதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

மெக்சிகோவில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு நிலைமை சீராகும் வரை அங்குள்ள இந்தியர்கள் யாரும் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT