கெய்ரோ: வட ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ராணுவத்துக்கும் ஆர்எஸ்எப் எனப்படும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு மனிதாபிமான உதவிகளுக்காக ஐ.நா. அமைதிப்படை செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சூடானின் மத்திய கோர்டோபான் பிராந்தியத்தில் கடுக்லி நகரில் உள்ள அமைதிப்படை தளவாடத் தளம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வங்கதேச வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 வங்கதேச வீரர்கள் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐ.நா. அமைதிப் படையினரை இலக்காக கொண்ட தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க் குற்றமாகும். இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த தாக்குதலை, கிளர்ச்சிக் குழுக்களுக்கு பின்னால் இருந்து செயல்படும் ஆர்எஸ்எப் துணை ராணுவப் படை நடத்தியிருப்பதாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஆர்எஸ்எப் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.