டெஹ்ரான்: முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமானால், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும், ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக் குழுவில் ஒருவருமான முஹம்மது பாகர் கலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை நிறுத்தப்பட்டால் மட்டுமே முழுமையான போர் நிறுத்தம் சாத்தியமாகும். இத்தகைய அப்பட்டமான போர் நிறுத்த விதிமீறல்கள்நீடிக்கும் வரை, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சாத்தியமற்ற ஒன்று" தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தார். “ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறது. அமைதி ஒப்பந்தம் சார்ந்து ஒருங்கிணைந்த முன்மொழிவை ஈரான் முன்வைக்கும் வரையில் இந்த போர் நிறுத்தம் தொடரும். அதே நேரத்தில் ஈரான் துறைமுகங்கள் முற்றுகையிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் பணியை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நான் கூறியுள்ளேன்,” என தனது அறிவிப்பில் அவர் தெரிவித்திருந்தார்.
உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கப் போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயார் என்றாலும், அதற்குப் பிரதிபலனாகத் தங்களின் கடல்சார் வர்த்தகச் சுதந்திரத்தை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.