உலகம்

‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்!” - இஸ்ரேல் பிரதமர்

மோகன் கணபதி

ஜெருசலேம்: ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி 10 நாட்கள் ஆகின்றன. தொடர்ந்து போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடருமானால், அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘ஈரானின் தற்போதைய அரசியல் தலைமையின் எதிர்காலம் அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது. தற்போதைய ஆட்சியை, அடக்குமுறை ஆட்சி என அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய அமைப்புக்கு எதிராக எழுந்து நிற்கும் அவர்களின் மனநிலையைப் பொறுத்தே ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது இருக்கும்.

          

ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

ஈரானிய மக்களுடன் சேர்ந்து நாம் வெற்றி பெற்றால், அவர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை அளிக்க முடியும். நாம் மாற்றத்தை உருவாக்குவோம். இஸ்ரேலின் சர்வதேச நிலைப்பாட்டிலும் நாம் பெரிய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT