

புது தில்லி: 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நீதித்துறை ஊழல் குறித்த பாடம் இடம் பெற்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.
பொது மன்னிப்பு கோரி என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சமீபத்தில் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தை வெளியிட்டது. அதில், “நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது.
என்சிஇஆர்டி இயக்குநரும் உறுப்பினர்களும் அந்த பாடம் இடம் பெற்றதற்காக எவ்வித நிபந்தைனகளும் இன்றி முழுமையான மன்னிப்பை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறார்கள். அந்த புத்தகங்கள் முழுயைாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. அவை இனி கிடைக்காது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘‘சிரமத்தை ஏற்படுத்தியதற்காக உண்மையில் நாங்கள் வருந்துகிறோம். அனைத்து தொடர்புடைய தரப்பினரின் புரிதலையும் பாராட்டுகிறோம். கல்வி உள்ளடக்கத்தில் துல்லியம், உணர்திறன், பொறுப்புணர்வு ஆகியவற்றை நிலை நிறுத்துவதில் என்சிஇஆர்டி தொடர்ந்து உறுதியாக உள்ளது’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், “நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது. அதில், நீதித் துறையின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கடந்த பிப். 26ம் தேதி இந்த வழக்கை விசாரித்தபோது, பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். புத்தகத்தில் குறிப்பிட்ட அத்தியாயத்தை எழுதியவர்கள் இனிமேல் புத்தகக் குழுவிலோ, கல்வித் துறையின் பணியிலோ ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். சந்தைக்குச் சென்ற 32 புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த புத்தகமும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’’ என உறுதி அளித்தார்.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில் ஆகியோர் ஆஜரானார்கள். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் மத்திய கல்வித் துறை செயலர், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நீதித் துறையில் ஊழல் என்ற அத்தியாயத்துடன் வெளியான 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அச்சு மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பாடப் புத்தகத்தை நீக்க வேண்டும்.
இதுதொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலும், மத்திய அரசும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகளைச் செயல்படுத்தியது தொடர்பான பிரமாண பத்திரங்களை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி துறையின் முதன்மைச் செயலாளர்கள் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்தப் புத்தகத்தை அச்சிடவோ, டிஜிட்டல் வடிவில் பகிரவோ தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’ என தெரிவித்தது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று என்சிஇஆர்டி பொது மன்னிப்பு கோரி உள்ளது.