டாக்கா: வங்கதேசத்தில் உள்ள எரி பொருள் நிரப்பும் மையத்தில் இந்து இளைஞர் ஒருவர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இது இனரீதியான தாக்குதலா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தின் கோலண்டா மோர் என்ற பகுதியில் கரிம் என்ற பெயரில் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை நான்கரை மணிக்கு கருப்பு நிற எஸ்யுவி வாகனம் ஒன்று எரிபொருள் நிரப்ப வந்தது. எரிபொருள் நிரப்பிய பின் பணம் செலுத்தாமல் டிரைவர் வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த இந்து இளைஞர் ரிபன் சாகா (30) கார் முன் நின்று மறித்தார். ஆனால் அவர் மீது கார் மோதியது. அவரது உடல் நெடுஞ்சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது.
இதைப் பார்த்த ஜாகிர் உசைன் என்ற மற்றொரு ஊழியர் கார் பின்னால் ஓடினார். அப்போது ரிபன் சாகாவின் உடல் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் நெடுஞ்சாலையில் கிடந்தது. இச்சம்பவம் குறித்து ராஜ்பாரி சதார் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பிச் சென்ற காரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் உரிமையாளர் அப்துல் காசிம், ஓட்டுநர் கமல் உசைன் ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களில் அப்துல் காசிம் வங்கதேச தேசிய கட்சியின் ராஜ்பாரி மாவட்ட முன்னாள் பொருளாளர் என்பது தெரியவந்துள்ளது. வாகனத்தை ஓட்டிச் சென்றது யார்? இச்சம்பவத்துக்கு இனரீதியான தாக்குதல் காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது சமீபகாலமாக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.