உலகம்

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு

மத்திய அரசு கண்டனம்

வேட்டையன்

புதுடெல்லி: உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அது முதல் இதுநாள் வரையில் ஏவுகணைகள், ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை திங்கட்கிழமை (ஜூலை 20) அன்று வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது:

ஜூலை 19, 2026 அன்று உக்ரைன் நாட்டின் ஒடேசா நகரில் இருந்து புறப்பட்ட ‘எம்.வி கோல்டன் லியோ’ என்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த கப்பலில் 17 மாலுமிகள் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள்.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இந்த விவகாரத்தை கவனத்துடன் கையாண்டு வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர் விரைந்து குணமடைய வேண்டும்.

இந்த வகையான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. சரக்கு கப்பல் மற்றும் அதில் பயணிக்கும் மாலுமிகள் மீதான இந்த வகை தாக்குதல் வருந்ததக்கது. இது கப்பல் போக்குவரத்தை தடைசெய்யும் வகையிலான தாக்குதலாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா காரணம்: உக்ரைன் குற்றச்சாட்டு

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா காரணம் என்று உக்ரைன் குற்றச்சாட்டு வைத்துள்ளது. தாக்குதலுக்கு ஆளான கப்பல் தானியத்தை கொண்டு சென்றுள்ளது. மூன்று ஏவுகணைகள் கப்பலை தாக்கியுள்ளது.

தாக்குதலுக்கு ஆளான கப்பலில் சிரியா மற்றும் இந்திய மாலுமிகள் இருந்துள்ளனர். இந்த தாக்குதல் கருங்கடல் பகுதியில் நடந்துள்ளது. கப்பலில் பயணித்த 17 பேரில் 8 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT