தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிக தலைமைத்துவ கவுன்சில் அமைக்கப்படும் என்று ஈரானின் மூத்த அரசியல்வாதி அலி லாரிஜானி கூறினார். ஈரான் அரசியலில் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக லாரிஜானி கடந்த ஆண்டு மீண்டும் உருவெடுத்தார்.
ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் முதல் பிராந்திய உறவுகள் மற்றும் உள்நாட்டு போராட்டங்களை அடக்குவது வரை பரந்த அளவிலான துறைகளை தற்போது லாரிஜானி நிர்வகித்து வருகிறார்.
நாட்டின் முன்னணி மதகுருமார் குடும்பங்களில் ஒன்றான லாரிஜானி, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஈரானின் முயற்சிகளை மேற்பார்வையிட்டு வந்தார். அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மீது கொடிய ஒடுக்குமுறையை வழிநடத்தியதாகக் கூறி ஜனவரி மாதம் அமெரிக்கா அவருக்கு தடை விதித்தது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை கொள்ளையடித்து சிதைக்க முயற்சிப்பதாகவும், பிரிவினைவாத குழுக்கள் நாட்டில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க முயற்சித்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் லாரிஜானி எச்சரித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக நியமிக்கப்பட்ட லாரிஜானி, கமேனியின் விசுவாசியாகவும், அரசு மட்டத்தில் நற்பெயரைக் கொண்டவராகவும் உள்ளார். ராஜ தந்திர உறவுகளைப் பற்றி விவாதிக்க லாரிஜானி சமீபத்திய மாதங்களில் முக்கிய நட்பு நாடான ரஷ்யாவிற்கு பலமுறை பயணங்களை மேற்கொண்டார்.
ஈரானின் புரட்சிகரப் படையின் முன்னாள் உறுப்பினரான லாரிஜானி, 2005-2007 வரை தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளராகப் பணியாற்றினார். மேலும், லாரிஜானி 2008 முதல் 2020 வரை நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தார்.