உலகம்

சிரியாவில் குண்டுமழை பொழிவதை நிறுத்த வேண்டும்: ஐரோப்பிய யூனியன்

செய்திப்பிரிவு

சிரியாவில் குண்டுமழை பொழிவதை நிறுத்துமாறு ஐரோப்பிய யூனியன் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட கூட்டறிக்கையில், “சிரியாவின் வடக்குப் பகுதியில் குண்டுமழை பொழிவதையும், அங்குள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

மேலும், இட்லிப் பகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் அவர்களுக்குரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

சிரியாவின் வடக்குப் பகுதியில் அத்துமீறி நுழைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிரியாவில் கடந்த சில நாட்களாக சண்டை அதிகரித்து வருகிறது.

கடந்த இரு மாதங்களில் சிரியாவில் நடக்கும் வன்முறை காரணமாக சுமார் 50,000 பேர் தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிரிய உள்நாட்டுப் போர்

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தவறவீடாதீர்

SCROLL FOR NEXT