துபாய் சர்வதேச விமான நிலையம் | கோப்புப் படம்

 
உலகம்

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

மோகன் கணபதி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில், ஒரு இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய இரண்டு ட்ரோன்கள் விழுந்தன. இதில், கானா நாட்டைச் சேர்ந்த இருவர், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுத்து நிறுத்தி வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதி என கூறப்படுகிறது. இரண்டு ட்ரோன்கள் துபாய் விமான நிலையம் அருகே விழுந்தாலும், விமான போக்குவரத்து வழக்கம்போல நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

          

ஐக்கிய அரபு அமீரத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேட்கப்படும் பெரிய சத்தங்கள் அனைத்தும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுவதன் விளைவாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமின்றி, பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு எதிராகவும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சில கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதோடு, எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT